Skip to main content

சேலம்: தண்ணீரில் தத்தளிக்கும் தளவாய்பட்டி! ஆவின் மீது மக்கள் பாய்ச்சல்!!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

சேலம் அருகே, ஆவின் பால் பண்ணையில் தேக்கி வைக்கப்படும் கழிவு நீரால் ரொட்டிக்கார வட்டம் என்ற சிறு கிராமமே தண்ணீரில் தத்தளிக்கும் வினோதமான பிரச்னையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. 

சேலம் மாநகராட்சி எல்லையையொட்டி இருக்கிறது தளவாய்பட்டி. இந்த பஞ்சாயத்தின் ஒரு பகுதிதான் ரொட்டிக்கார வட்டம். இந்தப்பகுதியில் காலங்காலமாக பன், வருக்கி போன்ற பேக்கரி உணவுகளை குடிசைத் தொழில்போல் செய்து வருவதால், ரொட்டிக்கார வட்டம் என்ற பெயர் வந்துள்ளது. நூற்றுக்கும் குறைவான குடும்பங்கள் வசிக்கும் சிறு வட்டம். ஆவின் பால்பண்ணையின் சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்திருக்கிறது ரொட்டிக்கார வட்டம்.

 

incident in salem

 

தளவாய்பட்டி கிராம மக்களிடம் இருந்து நிலத்தைப் பெற்று தொடங்கப்பட்டதுதான், சேலம், நாமக்கல் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் எனப்படும் ஆவின் பால் பண்ணை. 54 ஏக்கர் பரப்பளவு கொண்டது இந்நிறுவனம். எந்த நிறுவனத்திற்காக நிலத்தைக் கொடுத்தார்களோ அதே ஆவின் நிர்வாகம்தான் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டிருக்கிறது என்கிறார்கள் தளவாய்பட்டி, ரொட்டிக்காரவட்டத்தைச் சேர்ந்த மக்கள்.

தளவாய்பட்டி சிவராமன் என்ற இளைஞர் ரொட்டிக்காரவட்டம் பகுதிக்கு நம்மை அழைத்துச்சென்றார். வியாழக்கிழமை (அக். 17, 2019) மாலை 3.30 மணியளவில் நாமும் அந்தப் பகுதிக்குச் சென்றுவிட்டோம். முதலில் ராமசாமி மகன் சண்முகம் (40) என்பவர் வீட்டைப் பார்வையிட்டோம்.

 

incident in salem

 

சுமார் 400 சதுர அடி கொண்ட அந்த வீடு முழுக்க முழுக்க நிலத்தடி நீரூற்று காரணமாக மிதந்து கொண்டிருந்தது. நாம் சென்றபோது சண்முகம், வீட்டு அறைக்குள் தேங்கியிருந்த ஊற்று நீரை மோட்டார் வைத்து உறிஞ்சி வெளியேற்றிக் கொண்டிருந்தார். அவருடைய தந்தை ராமசாமியோ (72) சமையல் அறையில் தேங்கிய ஊற்று நீரை பிளாஸ்டிக் முறத்தால் அள்ளி அள்ளி வெளியே ஊற்றிக்கொண்டிருந்தார். அந்த வயதில் அவருக்கு அத்தகைய எக்சர்சைஸ் (!) தேவையற்ற சுமைதான். இன்னொரு அறையில், தண்ணீர் மீது போடப்பட்டிருந்த கட்டிலில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சண்முகத்தின் தாயார் படுத்திருந்தார்.


சண்முகம் நம்மிடம் பேசினார்.


''நாங்கள் இந்த இடத்தில் 1970ல் இருந்து குடியிருக்கிறோம். என்றைக்கு இந்த பகுதியில் ஆவின் பால்பண்ணை வந்ததோ, அப்போது இருந்தே ரொட்டிக்கார வட்டம் பகுதி மக்களுக்கு பிரச்னை ஆரம்பித்துவிட்டது. பால் பண்ணையில் பல ஏக்கர் நிலத்தில் தேவையற்ற கழிவு நீர் தேக்கி வைக்கப்படுகிறது. அதனால் இயல்பாகவே இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் எப்போதும் உயர்ந்தே உள்ளது. 3 அடி பள்ளம் தோண்டினாலே ஊற்று நீர் வந்துவிடும். சிமென்ட் தரைக்கு மேல் நீரூற்று 'குபுகுபு'வென வந்து கொண்டிருக்கிறது. ஒரு மணி நேரத்தில் எங்கள் வீடு முழுவதும் தண்ணீரால் நிரம்பி விடும். 

 

incident in salem

 

இந்தப் பகுதியில் எங்கள் குடும்பம்தான் முதன்முதலில் பேக்கரி தொழிலை தொடங்கியது. இங்குள்ள ஒரு வீட்டில்தான் பேக்கரி உணவுப்பொருள்களை தயாரித்து வந்தோம். நிலத்தடி நீரால் மண் சுவர் ஊறிப்போய் பத்து ஆண்டுக்கு முன்பு அந்தக்கூடம் இடிந்து விட்டது. அத்தோடு எங்கள் தொழிலும் முடங்கியது. இப்போது எங்களிடம் தொழில் கற்றுக்கொண்ட ஒருவரிடமே நான் கூலி வேலைக்குச் சென்று வருகிறேன். மழைக்காலம் வந்தால் எங்கள் நிலை இன்னும் மோசமாகி விடும். யாராவது ஒருவர் பொழப்பை எல்லாம் விட்டுவிட்டு, வீட்டில் தேங்கியிருக்கும் நீரை அப்புறப்படுத்தும் வேலைகளைச் செய்தே ஆகணும். நாங்கள் எல்லாம் நரக வேதனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,'' என்கிறார் சண்முகம்.
 

incident in salem

 

குப்புசாமி, ரதி, சந்திரன், மல்லிகா, சரவணன், பாப்பா, சின்னதுரை உள்பட 11 குடும்பத்தினர் நிலத்தடி நீரூற்றால் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வீடுகள் பெரும்பாலும் மண் சுவரால் ஆனவை. தாழ்வான பகுதியில் வீடுகள் அமைந்திருப்பதும் இந்த அவல நிலைக்கு இன்னொரு காரணம். சந்திரன் (72) என்பவரின் ரொட்டி தயாரிப்புக்கூடமும் நிலத்தடி நீரூற்றால் முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. 'ஆடு, மாடுகள் கட்டறதுக்கான முழக்குச்சி அடிச்சாலே தண்ணீர் பீறிட்டுக்கிட்டு வந்துடும்ங்க', என்கிறார் இன்னொரு முதியவர்.


இப்பிரச்னை குறித்து தகவல் அறிந்த ஆவின் பொது மேலாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, ஆவின் தலைவர் ஜெயராமன் மற்றும் வருவாய்த்துறை, இரும்பாலை காவல்துறை, எஸ்பிசிஐடி அதிகாரிகள் ரொட்டிக்காரவட்டம் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். 

 

incident in salem

 

அபரிமிதமான நிலத்தடி நீரூற்று, குடியிருப்புகளை மட்டுமின்றி வயல்வெளிகளையும் புரட்டி எடுத்திருக்கிறது. மாரியம்மாள் என்பவருக்குச் சொந்தமான வயலில் நீரூற்று காரணமாக இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது. கால்நடைகளுக்கான தீவனப் பயிர்கள் விளைந்தும், வயலில் தேங்கியுள்ள தண்ணீரால் அறுவடை செய்ய முடியாத நிலை. 'இப்படிலாம் இருந்தா நாங்க மாடு கன்னுகளை எப்படி வளர்த்த முடியும்? நாங்க வாழறதா சாவறதா?,' என்று புலம்பினார் மாரியம்மாள். அமிர்தம் என்பவரின் வயலிலும் நீரூற்று தேங்கியிருப்பதால் அவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.


வெள்ளியங்கிரி என்பவருக்குச் சொந்தமான வயல்வெளி கிட்டத்தட்ட குளம்போலவே மாறி இருந்தது. தண்ணீர் வெளியேறுவதற்கான வடிகால் வசதி இல்லாததால், டெங்கு பரப்பும் ஏடிஸ் எஜிப்ட் வகை கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. அந்தப் பகுதியில் பலரும் சிக்குன்குன்யா, டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருக்கின்றன.

 

incident in salem

 

மக்களிடம் பொறுமையாக பிரச்னைகளை கேட்டறிந்தார் ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு. எந்த வித பந்தாவும் இல்லாமல், 'நக்கீரன் சார்... ரொட்டிக்கார வட்டம் மக்களுக்கு உடனடி தேவை என்ன? உங்கள் தரப்பு யோசனைகள் என்ன?,' என்று கொஞ்சமும் பந்தா இல்லாமல் நம்மிடமும் கேட்டார்.


''கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீரூற்றால் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் 11 குடும்பங்கள் வசிப்பதற்கு மாற்று இடம் உடனடியாக தேவைப்படுகிறது. ஆவின் பால் பண்ணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை உடனடியாக குழாய் மூலம் தளவாய்பட்டி ஏரி அல்லது திருமணிமுத்தாற்றுக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்தப் பகுதியில் மாதந்தோறும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்,'' என்றோம்.


அதற்கும் அவரும் உடனடியாக சம்மதம் சொன்னார். மேலும், இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுப்போம் என்றவர், உடனடியாக ஆவின் கூட்டரங்கில் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார். மாலை 6.45 மணியளவில் கூட்டம் கூடியது. ஊர்மக்கள் மற்றும் ஊடக பிரதிநிதியாக நாமும் பங்கேற்றோம்.


தளவாய்பட்டி, ரொட்டிக்கார வட்டம் சார்பில் சிவராமன், தங்கராஜ், தோழர் சுந்தரம், ஆகியோர் பேசினர். அவர்கள், ''ஆவின் பால் பண்ணைக்கு நிலம் வழங்கிய 33 குடும்பத்தினருக்கு பட்டா கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பட்டா கிரய செலவுகளை ஆவின் நிர்வாகமே ஏற்க வேண்டும். பண்ணையில் கழிவு நீர் தேங்காதவாறு குழாய் மூலம் அப்புறப்படுத்த வேண்டும். அதனால்தான் எங்கள் கிராமங்களில் நிலத்தடி நீர் எதிர் ஊற்றுபோல் வந்து கொண்டிருக்கிறது. நீரூற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். பால் பண்ணை கழிவு நீரால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் எங்கள் ஊரில் சிஎஸ்ஆர் நிதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும்,'' என்றனர்.


மக்களின் கோரிக்கைகளை கவனமும் கேட்டுக்கொண்ட ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு, ஆவின் நிர்வாகம் செய்ய உள்ள பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்.


''பாதிக்கப்பட்ட 11 குடும்பங்கள் தங்குவதற்கு தற்காலிகமாக மாற்று இடவசதி செய்து தரப்படும். அவர்களுக்கு தமிழக முதல்வரின் பசுமை வீடு திட்டத்தில் வீடு வழங்கப்படும். ஆவினுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கிரய செலவு 33 லட்சம் ரூபாய் வரை ஆகும். அதை ரத்து செய்யவும் அரசிடம் கோரி வருகிறோம். அல்லது ஆவின் நிர்வாகமே அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளும். 


ஆவின் பால் பண்ணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர், கழிவு நீர் அல்ல. அந்த நீரால்தான் உங்கள் ஊரில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவு உயர்ந்திருப்பதாகச் சொல்வது முழுமையான காரணமாக ஏற்க முடியாவிட்டாலும் அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக்கருதுகிறேன். ரொட்டிக்கார வட்டம் கிராமம், புவியமைப்பு படியே தாழ்வான பகுதியாக அமைந்துள்ளது. மேலும், இந்தப் பகுதியில் இயற்கையிலேயே நிலத்தடி நீர் மட்டம் நல்ல நிலையில் உள்ளது. இப்போது மழைக்காலம் என்பதால் நீரூற்று வெளியேறி வருகிறது. இருந்தாலும் எங்கள் தரப்பில் எந்த தவறுகள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்கிறோம். 

 

incident in salem

 

நிலத்தடி நீர் மாசு குறித்து ஆய்வு செய்யப்படும். மருத்துவ முகாம் நடத்தப்படும். இப்போதைக்கு உடனடியாக நாளையே (இன்று, அக். 18) உங்கள் கிராமத்தில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்படும். பண்ணையில் உள்ள தண்ணீர் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். 


அதேநேரம், ஆவினிடம் இருந்து பட்டா வாங்கித் தருவதாகக் கூறி சிலர் பணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆவின் நிர்வாகத்தை மிரட்டிப் பார்க்கலாம் என்று யாராவது நினைத்தால் அவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார் விஜய்பாபு. அப்போது அவர் சொன்ன ஒரு வார்த்தைக்கு, ஊர் மக்கள் அதிருப்தி தெரிவித்ததால் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது.


இரவு 7.45 மணியளவில் அவசர ஆலோசனைக் கூட்டம் சுமூகமாக முடிந்தது. நாமும் இல்லம் நோக்கிக் கிளம்பினோம். கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கும் பிரச்னை இப்போது தீர்வை நோக்கி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.