Skip to main content

தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி... உடற்கூராய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 12/08/2021 | Edited on 12/08/2021

 

pudukottai

 

சிறு வயதிலேயே தாயை இழந்து, பிழைப்பிற்காக தந்தையும் வெளியூர் சென்றுவிட்ட நிலையில் வயதான தாத்தா, பாட்டி அரவணைப்பில், சித்தப்பா வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்குச் சென்றுவந்த 13 வயது சிறுமி, ஆள் இல்லாத வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அந்த 13 வயது சிறுமியின் தாய் 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தந்தையும் பிழைப்பிற்காக கோவைக்குச் சென்றுவிட்டார். தந்தை போகும்போது, தனது மகளை வயது முதிர்ந்த தன் தாய், தந்தையோடு விட்டதோடு, தன் தம்பி செந்திலிடம் அப்பா, அம்மாவோடு தன் மகளையும் கவனித்துக்கொள்ள சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

 

அந்த சிறுமியும் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (10.08.2021) வீட்டில் யாரும் இல்லாதபோது, 10 அடிக்கு மேல் உயரமுள்ள வீட்டு பூஜை அறையின் மேற்கூறையில் உள்ள கொக்கியில் நூல் கயிற்றில் தூக்குமாட்டிக் கொண்டுள்ளார். இதைக் கண்ட சித்தப்பா செந்தில், அருகில் உள்ளவர்களிடம் சொல்ல.. சுற்றியுள்ளவர்கள் வந்து சிறுமியைக் கீழே இறக்கி பார்த்தபோது  மாணவி இறந்துவிட்டார் என தெரியவந்தது. உடனே கீரமங்கலம் போலீசாருக்கும் சிறுமியின் தந்தைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

 

ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல், கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை செய்தனர். தடய அறிவியல் சோதனையும் செய்யப்பட்ட பிறகு, பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியின் உடலை அனுப்பிவைத்தனர். சிறுமியின் சடலத்தை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தபோது அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம், 13 வயது சிறுமியின் வயிற்றில் 7 மாத பெண் சிசு இறந்த நிலையில் இருந்துள்ளது. குழந்தையை டிஎன்ஏ ஆய்வுக்காக மருத்துவக் குழுவினர் அனுப்பியுள்ள நிலையில், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற ரீதியில் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ள போலீசார், வழக்கு விசாரணையை ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர்.

 

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர் யார் என போலீசார் தேடிவரும் நிலையில், சிறுமியின் சித்தப்பா செந்தில் தலைமறைவாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்