Skip to main content

காய்ச்சல்னு சிகிச்சைக்கு போன இளைஞருக்கு நேர்ந்த சோகம்... உண்மை தெரியனும்... உறவினர்கள் கதறல்

Published on 09/11/2019 | Edited on 09/11/2019

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்த அய்யாமணி மகன் லோகேஸ்வரன் (வயது 20). தனியார் பாலிடெக்னிக் மாணவன். கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு மெடிக்கல்களில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு குணமடையவில்லை.  அதனால் அவரது நண்பர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் பரிசோதனைகள் செய்யப்பட்ட போது செல்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது தெரிய வந்தது. அதனால் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சனிக்கிழமை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் பல மணி நேரத்திற்கு பிறகு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு குளுக்கோஸ் ஏற்றப்பட்ட போது திடீரென இடயத்துடிப்பு வேகமாக இருந்துள்ளது. சிறிது நேரத்தில் மூக்கு, வாயில் ரத்தம் வர மாணவன் லோகேஸ்வரன் இறந்துவிட்டான்.

 

pudukottai

 

அவசரமாக அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் பெற்றோரை அழைத்து.. பையனுக்கு இதயம் வெடித்து இறந்துவிட்டான். அதான் ரத்தம் வந்திருக்கு. உடனே பாடிய தூக்கிட்டு போயிருங்க. இங்க வச்சிருந்தா பிரேதப்பரிசோதனை செஞ்சு உடலை சிதைத்து கொடுப்பாங்க என்று சொல்ல அறியாமையில் இருந்த பெற்றோர் இறந்த தன் மகன் உடலை முழுமையாக கொண்டு போனால் சரி என்று நினைத்தனர். பெற்றோர்களிடம் பேசிய மருத்துவமனை ஊழியர்களே அமரர் ஊர்தியையும் கொண்டு வந்து நிறுத்த அதில் ஏற்றி அனுப்பி வைத்தனர். லோகேஸ்வரனின் நண்பர்கள் அங்கு சென்ற போது சடலம் அமரர் ஊர்த்திக்குள் இருந்தது. எப்படி இறந்தான் என்று கேட்டால் பதில் சொல்ல யாரும் இல்லை.

வீட்டுக்கு கொண்டு வந்து இரவிலேயே அடக்கமும் செய்துவிட்டனர். ஆனால் அதன் பிறகு வெளியூர்களில் இருந்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் காய்ச்சல்னு சிகிச்சைக்கு போனவன் எப்படி இதயம் வெடிச்சதா சொல்றாங்க. அப்ப வேறு ஏதாவது நோய் தாக்கி இருந்ததா? அரசு மருத்துவக்கல்லூரியில் இறந்த மாணவனை ஏன் பிரேதப் பரிசோதனை செய்யாமல் இறப்புக்காண காரணம் தெரிந்து கொள்ளாமல் அவசரமாக அமரர் ஊர்தில் ஏற்றி அனுப்பினார்கள். இதில் என்ன மர்மம் இருக்கிறது? என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்.

 

pudukottai

 

மருத்துவமனை வட்டாரம் மாணவன் இறப்பிற்கான சரியான காரணத்தை சொல்ல வேண்டும். மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து அதிகாரிகளை சந்திப்பது என்றும், சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்து முடிவெடுப்பது என்றும் கூறுகின்றனர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொருவர் நம்மிடம்.. போன வாரம் என் குழந்தைக்கு காய்ச்சல்னு திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனேன். எந்த பாதிப்பும் இல்லைன்னு பல நாள் மருத்துவம் பார்த்தும் குணமாகல. டெஸ்ட் எல்லாம் எடுத்தாங்க. காய்ச்சல் குணமாகலன்னு காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போனால் டெங்கு பாதிப்புன்னு டெஸ்ட் ரிசல்ட் வந்தது. அதன் பிறகு ரூ. 40 ஆயிரம் செலவு செஞ்சு குழந்தைக்கு சிகிச்சை கொடுத்து அழைத்து வந்தேன் என்றார்.

சுகாதாரத்துறை அமைச்சரின் மாவட்டத்தில் இப்படியா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. உறவினர்களின் சந்தேகத்தை மருத்துவக்குழுவினர் போக்கினால் நல்லது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.