Skip to main content

பிரபல தொழிலதிபர் மணல் ராமச்சந்தின் அலுலகத்தில் பணம் கொள்ளை!

Published on 27/12/2020 | Edited on 27/12/2020

 

தமிழகத்தின் பிரபல மணல் ஒப்பந்தக்காரர் முத்துப்பட்டினம் ராமச்சந்திரன். பல அரசியல் கட்சிகளுக்கும் மிகவும் நெருக்கமானவர். தேர்தல் வந்துவிட்டால் பல அரசியல் கட்சிகளுக்கும் நிதி வழங்கி தனது தொழிலை தக்க வைத்துக் கொள்வார். மணல் ஒப்பந்தம் இல்லை என்பதால் தற்போது கிராவல் விற்பனை தொடங்கி உள்ளார். இவருக்கு மட்டும் மண், மணல், கிராவல் எடுக்க எப்போதுமே அனுமதி உண்டு. அனுமதியே இல்லை என்றாலும் இவரது பேரில் உள்ள வாகனங்களை எந்த இடத்திலும் பிடிக்க மாட்டார்கள். அத்தனைத்துறை அதிகாரிகளும் அவரது விரல் அசைவுக்கு கட்டுப்படுவார்கள். கடந்த வருடம் தஞ்சை எம்.பி பழனிமாணிக்கம் தம்பி ராஜ்குமார் மகனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்து தி.மு.க உடனான உறவை வலுப்படுத்திக் கொண்டார். அதே போல அதிமுகவில் அமைச்சர்கள் பலர் அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து செல்வார்கள்.

 

தற்போது மணல் குவாரி குறைந்திருப்பதால் வம்பனில் புஷ்கரம் என்ற பெயரில் வேளாண்மை கல்லூரியும் தொடங்கி உள்ளார். இவரது குவாரியில் ஓடிய பொக்கலின், லாரிகள் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்து தற்போது ஓடத் தொடங்கியுள்ளது. விரைவில் ஆளுங்கட்சி அமைச்சருடன் கூட்டணி அமைத்து காவிரி- குண்டாறு இணைப்பிற்கான கால்வாய் வெட்ட வாகனங்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

இவருக்கு புதுக்கோட்டை பிரகதாம்பாள் பள்ளிக்கு பின்பக்கம் ஆடிடிங் அலுவலகம் இயங்கி வருகிறது. (பல தொழிலதிபர்களுக்கும் இது தான் ஆடிடிங் அலுவலகம்) இந்த அலுவலகத்தில் பலர் வேலை செய்து வருகின்றனர்.இந்தநிலையில்தான் இன்று காலை அலுவலகத்தை திறக்க வந்த ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளை போயிருந்தது. உடனே முத்துப்பட்டினம் ராமச்சந்திரனுக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அடுத்த சில நிமிடங்களில் நகர டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்கள் என போலீஸ் படையே வந்து சோதனை செய்தனர். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் வந்துள்ளனர். ஆனால் கொள்ளைபோன பணம் எவ்வளவு என்பது பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. அதனால் கொள்ளை போன பணத்தின் மதிப்பு அதிகமாக இருக்கலாம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஆனால் அலுவலக ஊழியர்களோ பணம் கொள்ளை போகவில்லை  கொள்ளை முயற்சி தான் என்கிறார்கள்.

 

எது எப்படியோ புகார் கொடுக்காமலேயே திருடனை பிடிக்க பல தனிப்படைகள் ரகசியமாக செயல்படும் என்பதில் சந்தேகமில்லை. விரைவில் திருடன் பிடிபடலாம். ஆனால் கொள்ளையின் மதிப்பு குறைவாக காட்டப்படலாம். இத்தனைப் பெரிய அலுவகத்தில் ஒரு கண்காணிப்பு கேமரா கூட இல்லையாம்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்