Skip to main content

ரவுடி கொலையில் கைதானவர்கள் விடுதலை! விடுதலையான நாளிலேயே ரவுடி பழிக்குபழி கொலை!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர், முரளி. ரவுடிகளான இவர்கள் இருவரும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 15.2.2017 அன்று முரளி வெட்டி கொலை செய்யப்பட்டான்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சுந்தர், தட்டாஞ்சாவடி செந்தில், லாஸ்பேட்டை பாண்டியன் மகன் அமரன் (24), அசோக், சுரே‌‌ஷ், பிரகா‌‌ஷ், சூர்யா, சரத், மணிமொழி, கார்த்திகேயன், ஜெயகுமார் மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 12 பேர் மீது கோரிமேடு போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதில் சிறுவன் சீர்திருத்த பள்ளியிலும், சுந்தர் உள்ளிட்ட 11 பேர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

 

incident in puducherry...


இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் சுந்தர், அமரன் உள்ளிட்ட 11 பேரையும் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த அமரன் புதுச்சேரிக்கு சென்றால் பழிக்கு பழியாக தாம் கொலை செய்யப்படுவோம் என கருதி தஞ்சாவூரை சேர்ந்த அவரது மைத்துனர் உதயகுமாருடன் தஞ்சாவூருக்கு நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தார். அவர்களுடன் பாண்டியன் என்பவரும் சென்றார். காரை தஞ்சாவூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் ஓட்டினார்.

கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த கருங்குழி அருகேயுள்ள டாஸ்மாக் கடை அருகே இரவு 9.30 மணி அளவில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது  உதயகுமாரும், பாண்டியனும் மது அருந்துவதற்காக காரை நிறுத்துமாறு மாரிமுத்துவிடம் கூறினர். உடனே அவர் டாஸ்மாக் கடை அருகில் காரை நிறுத்தினார். பின்னர் உதயகுமார், பாண்டியன், மாரிமுத்து ஆகியோர் காரில் இருந்து இறங்கி டாஸ்மாக் கடைக்கு சென்றனர்.

அமரன் மட்டும் காரில் தனியாக இருந்தார். அப்போது அங்கு 4 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்த கும்பல் திடீரென அமரனை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு, அவரது தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை முழுவதும் பலத்த காயமடைந்த அமரன் அதே இடத்தில் உயிரிழந்தார். இதனிடையே மதுவாங்கிக் கொண்டு வந்த பாண்டியனையும் அந்த கும்பல் வெட்டி விட்டு, தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி  விட்டது.

 

incident in puducherry...


இந்த கொடூர கொலையால் டாஸ்மாக் கடைக்கு வந்த மதுபிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அமரன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதுடன், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் முரளி கொலைக்கு பழிக்குப்பழியாக அமரன் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.  மேலும் இது குறித்து  போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.