திண்டுக்கல், பழனி டிஎஸ்பி அலுவலகம் முன்பு காணாமல்போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி தனது குழந்தைகளுடன் திமுக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனியை அடுத்த நெய்க்காரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் உசேன். இவருக்கு திருமணமாகி தஸ்லீமா என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். உசேனின் மனைவி தஸ்லீமா கடந்த 4 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக நெய்க்காரபட்டி காவல் நிலையத்தில் உசேன் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் போலீசார் உசேனின் புகாரை அலட்சியம் செய்ததால் மனமுடைந்த உசேன் பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு முன், தனது இரண்டு குழந்தைகள் மற்றும் தனது உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்துள்ளார்.
அதைக்கண்டு சம்பவ இடத்தில் இருந்த போலீஸார் உசேன் மற்றும் குழந்தைகளை மடக்கி பிடித்து தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் பழனி நகர காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த பழனி டி.எஸ்.பி சிவா, உசேனை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக்கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.