பழனி அருகே உள்ள நாகூர் பிரிவு கிராமத்தில், தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் விவசாயி முருகசாமி தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வீட்டில் நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் முகமூடி அணிந்த வந்த பத்து நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை கத்திமுனையில் மிரட்டி நகை, பணத்தை கேட்டுள்ளனர். உயிருக்கு பயந்த முருகசாமியின் குடும்பத்தினர் கழுத்தில் அணிந்திருந்த 20 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்களிடன் கொடுத்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்தவர்களிடம் பணத்தை கேட்டு கொள்ளையர்கள் மிரட்டிய நிலையில் பணம் கிடைக்காததால் வீட்டில் இருந்தவர்களை தாக்கி காயப்படுத்தி கை, கால்களை கட்டி போட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் கொள்ளையர்களைப் பார்த்து குரைத்த நாயையும் கத்தியால் தாக்கியுள்ளனர். இந்த பகுதியில் விவசாயிகள் பெரும்பாலும் தோட்ட வீடுகளில் வசித்து வருகிறார்கள். ஒவ்வொரு வீடுகளுக்கும் இடையே அதிக இடைவெளி இருக்கும் நிலையில், நேற்று இரவு நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து பழனி, சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் முருகசாமி புகார் அளித்ததின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அதோடு சம்பவ இடத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் நேரடியாக விசாரணை செய்தார். தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.