Skip to main content

"என் காதலன் வருவான் என்னைக் கைப்பிடிக்க" - கல்யாணத்தை நிறுத்திய மணமகள்!

Published on 31/10/2020 | Edited on 01/11/2020

 

incident in nilagiri

 

நீலகிரி மாவட்டம் குந்தாபிரிஜ் மட்டகண்டியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் தூனேரியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 29 -ஆம் தேதி திருமணம் நடத்த முடிவாகிய நிலையில், மணமகன் வீட்டில் திருமணத்திற்காக தடபுடல் விருந்து ஏற்பாடாகியிருந்தது.

மணமகன் மணவறையில் ஆசையாய்க் காத்திருக்க, தாலிகட்டும் நேரம் நெருங்கியதால் உறவினர்கள் புடை சூழ மணமகள் அழைத்துவரப்பட்டார். மந்திரங்கள் ஓத, மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டப்போகும் போது திடீரென தடுத்த மணமகள் "ஒரு மணி நேரம் காத்திருங்கள். என் காதலன் பார்த்திபன் வருகிறார். என்னைக் கைப்பிடித்துக் கூட்டிப் போக" எனச் சொல்ல  மண்டபமே அதிர்ந்துவிட்டது.

உறவினர்கள் சிலர் அறிவுரை சொல்லியும், அதெல்லாம் முடியாது என பிடிவாதமாக இருந்தார் மணமகள் பிரியா. மணமகன் என்ன செய்வது என்று தெரியாமல் தர்மசங்கடத்தில் அமர்ந்திருந்தார். அதே நேரத்தில் கோபமடைந்த மணமகளின் தாய், பிரியாவை தாக்க வர, சலசலப்பு ஏற்பட்டது. சிறிது நேர சலசலப்பிற்குப் பின் பிரியாவின் வீட்டார் அனைவரும் ஒரு வாகனத்தில் ஊட்டிக்குப் புறப்பட்டனர். 'லவ்டேல்' என்ற பகுதியில் காதலன் எனக்காகக் காத்திருப்பதாக பிரியா கூறியதை அடுத்து பெண் வீட்டாரும், 'நீ தொலைந்து போ!' என்று கூறி அங்கு இறக்கிவிட்டுப் போய்விட்டனர்.

 

cnc


இது குறித்து ஊர் மக்கள் கூறும்போது, "பிரியா சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, ஏற்கனவே திருமணமான பார்த்திபன் என்பவரோடு காதல் ஏற்பட்டுள்ளது. பார்த்திபன் தனது மனைவியை விவாகரத்துச் செய்தவுடன், பிரியாவை திருமணம் செய்வதாக உறுதியளித்து இருக்கிறார். இது பெண் வீட்டாருக்கும் தெரியவர, வேறு சமூகப் பையனைத் திருமணம் செய்ய ஒத்துக் கொள்ளமாட்டோம் எனச் சொல்லியே இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள்" என்றனர்.

 

மணமேடையிலேயே மணமகள், 'என்னை அழைத்துச் செல்ல, என் காதலர் வருவார்' என உறவினர்களிடம் கூறிய அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.