Skip to main content

பிடிபட்ட தாதுமணல் லாரி கடத்த முயற்சி... எஸ்.பி.யின் அதிரடி நடவடிக்கையால் தப்பியது!

Published on 06/09/2020 | Edited on 06/09/2020
incident in nellai

 

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி, சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ பிரதீப் மற்றும் போலீசார், கரோனா வாகன சோதனையின் பொருட்டு நாங்குநேரி-மூலக்கரைப்பட்டிச் சாலையில் வாகனச் சோதனையிலிருந்தனர்.  அது சமயம் திசையன்விளையிலிருந்து தார் பாய் போர்த்தி மூடப்பட்ட கனரக லாரி ஒன்று அந்த வழியாக வந்ததை நிறுத்திச் சோதனையிட்டிருக்கிறார்கள்.  அதில் தடை செய்யப்பட்ட தாது மணல் இருப்பதும், அது உரிய ஆவணங்கள் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்திருக்கிறது. மேலும் விசாரணையில், திசையன்விளை அருகேயுள்ள குட்டம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆலையிலிருந்து தரம் பிரிக்கப்பட்ட தாது மணல் 30 டன் எடையுள்ளது, தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சங்கராபேரியிலுள்ள தனியார் குடோனுக்குக் கொண்டு செல்லும் வழியில் போலீசார் வசம் சிக்கியிருக்கிறது.

30 டன் சிலிக்கான் தாது மணலுடன் லாரியைப் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து அதன் டிரைவர் தூத்துக்குடியின் நாகராஜ் அவரது மகன் முத்துக்குமார் இருவரையும் கைது செய்தனர்.

கடத்தப்பட்ட இந்த தாது மணல் இந்திய அரசின் அணுசக்தி துறையால் 2017 அக்டோபரில் தடை செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்டத்தின் உவரி, ராதாபுரம், தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட கடற்கரையோரம் அரிதிலும் அரிதாகக் கிடைக்கிற தாது மணல் அனுமதிக்கப்பட்டத்தையும் மீறி பல கோடி மதிப்புள்ளது வெட்டி எடுக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது தெரியவரவே அதனை வெட்டி எடுக்கவும் ஏற்றுமதி செய்யவும் தடை விதித்தது இந்திய அணுசக்தி துறை. மேலும் 1 கிலோ தாது மணல் வெட்டி எடுத்தால் கூட கடுமையான சிறை தண்டனை எனஅவசரச் சட்டமும் பிறப்பித்தது அத்துறை.

இந்த நிலையில் பல கோடி மதிப்புமிக்க தாதுமணல் லாரியில் கடத்தப்பட்டது  இலுமினைட்டா, சிலிக்கானா, ரூட்டெய்லா அல்லது யுரேனியமா என்பது ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என்கிறார்கள்.

இதனிடையே பிடிபட்ட தாது மணல் லாரியை சிலர் கடத்த முயற்சிப்பதாக ரகசிய தகவல் போலீசாருக்குக் கிடைக்கவே,  துரிதமாகச் செயல்பட்ட மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணன் அந்த லாரிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ததுடன் பிடிபட்ட இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்திருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது