Skip to main content

திருச்சியில் இருந்து பார்சலில் வந்த வெடிகுண்டு... நீடாமங்கலம் பரபரப்பு!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

INCIDENT IN NEEDAMANGALAM

 

மல்டி லெவல் மார்கெட்டிங்கில் போடபட்ட பணத்தைத் திருப்பிக் கேட்டவருக்கு, பார்சலில் வெடிகுண்டு அனுப்பி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் நீடாமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்த வீரக்குமார் என்பவர் அதே ஊரில் ஸ்டுடியோ மற்றும் வீடியோ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று நீடாமங்கலத்தில் செயல்படும் தனியார் கூரியர் சேவை மையத்தில் இருந்து, வீரகுமாருக்கு பார்சல் ஒன்று வந்திருப்பதாகவும், அந்த பார்சலை உடனடியாக வந்து பெற்றுக் கொள்ளும்படியும் தொலைப்பேசியில் அழைத்துக் கூறியுள்ளனர்.


வீரகுமாரும் உடனடியாகச் சென்று பார்சலை வாங்கியுள்ளார். ஆனால், பார்சல் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து, வீட்டிற்கு தயங்கியபடியே எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், இந்த பார்சல் திருச்சி முகவரியில் இருந்து வந்திருந்ததைக் கண்டதும் அவருக்கு சந்தேகம் அதிகமானது. அதன்பிறகு நீடாமங்கலம்  காவல் நிலையத்தில் பார்சலைக் காட்டி புகார் அளித்தார். பார்சலை பிரித்துப் பார்த்ததுமே அதில் வெடிகுண்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 

உடனே வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்துவந்த நிபுணர்கள் அந்த பார்சலை சோதனை செய்த பிறகு அது ஜெலட்டின் குச்சிகள் என்றும், இது வெடித்திருந்தால் 15 முதல் 20 அடி வரை பாதிப்பு ஏற்படும் என்றும், கிணறு தோண்டவும், பாறைகள் வெடிப்பதற்கும் பயன்படுத்தக் கூடிய பொருள் என்றும் தெரிவித்தனர். வெடிபொருட்களை செயலிழக்கச் செய்து, பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, மண்ணில் புதைத்தனர்..

 

Ad

 

இதுகுறித்து வீரகுமார் கூறுகையில், "திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய (எல்ஃபின் இ-காம்) 'அறம்' மக்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளான ரமேஷ் மற்றும் ராஜா ஆகியோர் தான் இதை அனுப்பி இருப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் பல லட்சம் வரை முதலீடு செய்துள்ளேன். தற்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டு திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தேன், அதனால்தான் தன்னை மிரட்டுவதற்காக, (எல்ஃபின் இ-காம்) 'அறம்' மக்கள் நலச்சங்கம் இந்த வெடிபொருட்கள் அனுப்பி இருக்கக் கூடும்," எனக் கூறுகிறார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

வழக்கறிஞர்களுக்கு வந்த மின்னஞ்சல்; ம.தி.மு.க. எடுத்த முடிவு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
election commission Email to mdmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது.

பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து 2.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில், நாளை (27-03-2024) காலை 9 மணிக்குள் பம்பரம் சின்னம் தொடர்பாகப் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்குப் பதில் அளித்துள்ளது. வேண்டுமானால் மதிமுக சார்பில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பம்பரம் இல்லாவிட்டாலும் தனி சின்னத்தில் தான் போட்டி என்ற முடிவில் ம.தி.மு.க. தீர்க்கமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சின்னம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.