Skip to main content

சேலம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை!

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

சேலம் அருகே, ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி - அரியானூர் சாலையில், தெட்டாம்பட்டி என்ற பகுதியில் சனிக்கிழமை (அக். 4) காலை சாலை ஓரமாக 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. அவரை மர்ம நபர்கள் கொன்று வீசியிருப்பது தெரிய வந்தது.

 

INCIDENT NEAR TO SALEM



இதைப்பார்த்த பொதுமக்கள், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். டிஎஸ்பி உமாசங்கர், ஆய்வாளர் குலசேகரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலம், உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலையுண்ட நபரின் தலையில் கத்தி அல்லது அரிவாளால் வெட்டப்பட்டதற்கான ஆழமான காயம் இருந்தது. சடலத்தின் அருகில் ஒரு மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது.

தீவிர விசாரணையில், கொலையான நபர் சேலம் அன்னதானப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்த சேகர் மகன் மோகன் (29) என்பது தெரிய வந்தது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அவரை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

சடலம் அருகே கிடந்த மோட்டார் சைக்கிள் மோகனுடையது இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அதனால் கொலையாளிகள் மோகனை வேறு எங்கோ வைத்து தீர்த்துக்கட்டிவிட்டு, சடலத்தை தெட்டாம்பட்டி பகுதியில் வீசி இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

சடலம் அருகே கிடந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்தும் கொலையாளிகள் குறித்த விசாரணை நடந்து வருகிறது. அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ரவுடிகள் இந்த கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறை, பெண் விவகாரத்தில் கொலை நடந்ததா? அல்லது தொழில் போட்டியால் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

கொலையான மோகனுக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. மேலும் மோகனுக்கு இன்றுதான் பிறந்த நாள் ஆகும். காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.