Skip to main content

ஆட்டோ ஓட்டுநரை கொன்று குப்பையில் எரித்த சம்பவம்... இருவர் கைது!

Published on 05/06/2022 | Edited on 05/06/2022

 

incident in chennai

 

சென்னை பூந்தமல்லி அருகே கண்ணப்பாளையம் செல்லும் சாலையோரம் குப்பை கொட்டப்படுவது வழக்கம். அந்த குப்பைகள் சில நேரங்களில் எரிந்து கொண்டிருப்பதும் வழக்கம். கடந்த 25 ஆம் தேதி சாலையோரம் எரிந்துகொண்டிருந்த குப்பையில் தலை, கைகள் இல்லாமல் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டனர். குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து, அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

 

இந்தச் சம்பவத்தில் திருவேற்காடு போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்டது மாங்காடு சாதிக் நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிராஜூதீன் என்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக கொலையாளிகளைக் கண்டறிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், ஆட்டோ ஓட்டுநர் சிராஜுதீன் அவருடைய காதலி ஜூனத் என்பவருடன் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு துணை நடிகை ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. ஜூனத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று சிராஜுதீன் பூந்தமல்லியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு ஜூனத் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

 

ஆட்டோ ஓட்டுநர் சிராஜுதீன் துணை நடிகை கொலைக்காக ஜூனத்திடம் அதிக பணத்தை வாங்கி உள்ளார். இடையில் ஜூனத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட, பணத்தைத் திரும்ப கேட்டுள்ளார் ஜூனத். ஆனால் சிராஜுதீன் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். அவ்வப்போது வீட்டிற்கு சென்று சிராஜ்தீன் ஜூனத்க்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது. பின்னர், ஜூனத்க்கு மகேஷ் என்ற வேறு நபருடன் காதல் ஏற்பட்டது. புதிய காதலன் மகேஷ் வீட்டுக்கு வந்தபோது சிராஜுதீனும் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார். இதில் மகேஷ் சரமாரியாக தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் சிராஜுதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். போலீசுக்கு தெரியாமல் இருக்க சிராஜுதீன் உடலை வெட்டி குப்பையில் போட்டு எரித்துள்ளனர். இந்த சம்பவத்தில் மகேஷ் மற்றும் ஜூனத்தை கைது செய்த திருவேற்காடு போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்