Skip to main content

பேய் ஓட்டுவதாகக் கூறி, சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்; நாமக்கல் மந்திரவாதி மீது போக்சோ பாய்ந்தது!

Published on 19/11/2020 | Edited on 20/11/2020

 

incident in namakkal

 

நாமக்கல் அருகே, பேய் ஓட்டுவதாகக் கூறி இரண்டு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மந்திரவாதியைக் காவல்துறையினர் 'போக்சோ' சட்டத்தில் கைதுசெய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பரவக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளிக்கு 9 மற்றும் 15 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். கரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால், சிறுமிகள் வீட்டில் இருந்து வருகின்றனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வீட்டில் முடங்கி இருந்ததால் சிறுமிகளுக்கு லேசாக மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உள்ளூரைச் சேர்ந்த சிலரின் ஆலோசனையின் பேரில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரத்தில் உள்ள மந்திரவாதி சேகர் (50) என்பவரிடம் தாயத்துக் கட்டி வருவதற்காக பெற்றோர் சிறுமிகளை அழைத்துச் சென்றனர்.

அப்போது சிறுமிகளுக்குப் பேய் பிடித்துள்ளதாகக் கூறிய மந்திரவாதி, சில நாள்கள் அவர்களை அங்கேயே தங்கவைத்து பேயோட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய சிறுமிகளின் பெற்றோர், மகள்களை அவரிடம் விட்டுவிட்டு வீடு திரும்பிவிட்டனர். அந்த மந்திரவாதியோ பேய் ஓட்டுவதாகக் கூறிவிட்டு, சிறுமிகளிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகள், சில நாள்கள் கழித்துத் தங்களை அழைத்துச் செல்வதற்காக வந்த பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

 

cnc


இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து மங்களபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல்துறையினர் மந்திரவாதி சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் நவ. 18ஆம் தேதி கைது செய்தனர். அவர் வேறு யார் யாரிடம் இதுபோல பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.