Skip to main content

கோஷ்டி தகராறில் வாலிபர் உயிரிழப்பு... போலீஸ் குவிப்பு!

Published on 13/06/2021 | Edited on 13/06/2021

 

incident in marakkanam

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் 45 வயது தங்கராஜ். கட்டிட மேஸ்திரியான இவர் கரோனா  ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அபின் என்கிற ராமதேவ் (வயது 27)  என்ற இளைஞர் நண்பர்கள் 6 பேருடன் அங்கு வந்துள்ளார். இரு தரப்பினரும் அப்போது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே சிறிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் வாக்குவாதம் முற்றி திடீரென இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருதரப்பினரையும் பிரச்சனை வேண்டாம் ஒரே ஊரில் வசிக்கும் உங்களுக்கு எதற்கு சண்டை சச்சரவு என்று கூறி இரு தரப்பினரையும் ஒதுக்கிவிட்டுள்ளனர். இதையடுத்து தங்கராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட அவரவர் வீடுகளுக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு தனது நண்பர்களுடன் தங்கராஜ் குடியிருந்த பகுதிக்குச் சென்ற ராம்தேவ் மற்றும் அவரது நண்பர்கள் தங்கராஜ் மற்றும் அவரது நண்பர்களிடம் மீண்டும் தகராறு செய்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் மீண்டும் தடி இரும்பு போன்ற ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

 

இந்த மோதலில் ராம்தேவ் தங்கராஜ் ஆறுமுகம் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கலவரம் நடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். படுகாயமடைந்த ராம்தேவ் மற்றும் ஆறுமுகத்தை மீட்டு மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஆறுமுகம் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்த ராம்தேவ் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ராம்தேவ் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரு தரப்பினரும் மரக்காணம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஆறுமுகம், ஐயப்பன், செந்தில், ஏகாம்பரம். அதேபோல் ராம்தேவ் நண்பர்கள் பூவரசன். ஆகாஷ் உட்பட இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் ராம்தேவ் உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால். கோட்டகுப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.