Skip to main content

தாயால் வீட்டில் பூட்டி வைக்கப்பட்ட ரவுடி படுகொலை-திருவொற்றியூரில் பரபரப்பு

Published on 05/06/2025 | Edited on 05/06/2025
incident of a man locked in his house by his mother - a stir in Thiruvotriyur

சென்னை திருவொற்றியூரில் வீட்டில் பூட்டி வைத்த ரவுடியை கும்பல் ஒன்று கதவை உடைத்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்த ஆகாஷ் மீது கொலை முயற்சி, வழிப்பறி என 17க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆகாஷ் கடந்த 22 ஆம் தேதி வெளியே வந்ததாக கூறப்படுகிறது. ஆகாஷ் கைதின் பொழுது வழுக்கி விழுந்ததால் காலில் காயம் ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டிருந்தது.

காலில் கட்டுடன் சிறையில் இருந்து வெளியே வந்த ஆகாஷை அவரது தாயார் ஜெயா வீட்டுக்குள் வைத்து பராமரித்து வந்துள்ளார். வெளியே செல்லும்போது ஆகாஷை உள்ளே விட்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு செல்வதை தாயார் ஜெயா வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டுக்கு வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு தாய் ஜெயா வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது.  

பின்னர் வீடு திரும்பிய பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயா, உள்ளே சென்று பார்த்தபோது ஆகாஷ் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த திருவொற்றியூர் போலீசார் ஆகாஷின் உடலைக் கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆகாஷை கொலை செய்தது யார் என்பது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சார்ந்த செய்திகள்