பெற்றோரிடமிருந்து சொத்தை எழுதி வாங்கி வரும்படி மனைவியிடம் சண்டையிட்ட காதல் கணவன் ஒரு கட்டத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். இவர் கல்லூரியில் தன்னுடன் படித்த பூரணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருதரப்பு பெற்றோர்களின் சம்மதத்தை மீறி திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு குழந்தை பிறந்திருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் குழந்தைக்கு பாலூட்டும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பூரணி இறந்து விட்டதாக மதன்குமார் கூறியிருந்தார். ஆனால் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மதன்குமார் அவருடைய பெற்றோர் யுவராஜ், பூங்கொடி ஆகியோர் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பூரணியின் பெற்றோரிடமிருந்து சொத்தை எழுதி வாங்கி வருமாறு காதல் கணவன் மதன்குமார் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளார். ஆனால் பூரணி மறுத்ததால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கழுத்தை நெரித்து கொலை செய்த காதல் கணவர் மதன்குமார், இதற்கு உடந்தையாக இருந்த அவருடைய பெற்றோர் யுவராஜ், பூங்கொடி ஆகியவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.