Skip to main content

முடித்திருத்தம் செய்யாததற்குக் கண்டிப்பு... எலி பேஸ்ட் சாப்பிட்டு மாணவன் தற்கொலை!

Published on 02/11/2021 | Edited on 02/11/2021

 

Incident in kumpakonam

 

கும்பகோணம் அருகே முடித்திருத்தம் செய்யாததற்குக்  ஆசிரியர்கள் கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் விஷால் திருநாகேஸ்வரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அளவுக்கு அதிகமாக முடி வைத்துக்கொண்டு புள்ளிங்கோ ஸ்டைலில் இருந்ததால் பள்ளிக்கு வந்த மாணவர் விஷாலை ஆசிரியர்கள் முடித்திருத்தம் செய்து கொண்டு பள்ளிக்கு வருமாறு அறிவுரை கூறியுள்ளனர்.

 

ஆசிரியர்களின் அறிவுறுத்தலுக்கு பிறகும் முடியை நன்றாக வெட்டாமல் மாணவன் பள்ளிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. கடந்த 26ம் தேதி பள்ளிக்கு வந்த விஷாலைப் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஆனால் மாணவர் விஷால் பெற்றோரை அழைத்துவரவில்லை. இதனை கண்டிக்கும் விதமாக வகுப்பறையின் வாசலில் நிற்க வைத்துத் தண்டனை கொடுத்துள்ளனர்.

 

Incident in kumpakonam

 

இதனையடுத்து மதிய உணவு இடைவேளையின் பொழுது எலி பேஸ்ட் ஒன்றை வாங்கிய மாணவன் விஷால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், இதற்குக் காரணம் பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் எனவும் கூறி வீடியோ எடுத்து வைத்து விட்டு எலி பேஸ்ட்டை சாப்பிட்டுள்ளார். அந்த வீடியோ சக வகுப்பு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதிர்ந்துபோன மாணவர்கள் இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சென்று மாணவன் விஷாலை மீட்ட தலைமையாசிரியர் சம்பத் உள்ளிட்ட ஆசிரியர்கள் அவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

 

மேல் சிகிச்சைக்காகத் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த 5 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த விஷால் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் திருநீலக்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் உயிரிழப்பு சம்பவத்தால் அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக போலீசார் அப்பகுதியில் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Leopard movement Holiday for 9 schools

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர்.

அதே சமயம் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்தால் 9994884357 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று (05.04.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி, அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளி என 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.