Skip to main content

4  கோடி ஆன்லைன் பரிசு...  அப்பாவிகளை ஏமாற்றும் ஆன்லைன் டுபாக்கூர்கள்... தப்பிய கோவில்பட்டி தொழிலாளி!!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
incident in kovilpatti

 

ஜெட் வேகமெடுக்கும் கரோனா பரவல் தற்போது தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் வரை வந்துவிட்டது. ஐந்து மாதங்கள் கடந்தும் தடுப்பு மருந்து இல்லாத நிலையில், தடுப்புக்கு ஊரடங்கு மட்டுமே மருந்து என்பது கூட பயனற்றுப் போய்விட்டது. ஒருபுறம் மிரட்டும் கரோனா, மறுபக்கம் வேலையின்மையால் வருமானம் பாதிப்பு. பசி, பிள்ளைகளோடு தவிக்கும் பல தட்டு மக்கள். கரோனா வைரசைக் காட்டிலும் கொடிய கிருமியான வறுமையை எதிர் கொள்ளமுடியாமல் பரிதவிப்பிலிருக்கிறார்கள்.

இந்நிலையில், மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் அந்த அப்பாவி மக்கள் லாக்டவுணில் முடங்கியிருப்பதை வாய்ப்பாக்கிக் கொண்ட ஆன்லைன் கும்பல்கள், ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் பரிசு என்று மக்களிடம் உள்ளதையும் உருவிக் கொண்டிருக்கிறது.

இந்த டுபாக்கூர்களிடமிருந்து அதிர்ஷ்டவசமாக ஒரு சிலரே புத்திசாலித்தனமாகத் தப்பியுள்ளனர். அதில் ஒருவர்தான் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரின் சங்கர்ராஜ் என்ற ஹோட்டல் தொழிலாளி.

 

incident in kovilpatti


சங்கர்ராஜின் செல் நம்பருக்கு 4 கோடி பரிசு விழுந்துள்ளதாக ஒரு குறுந்தகவல் வந்திருக்கிறது. அதையடுத்த சில நொடிகளில் அவரது நம்பரில் தொடர்பு கொண்ட ஒரு நபர், பிரிட்டீஷ் மோட்டார் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், வாழ்த்துக்களைச் தெரிவித்தவர், இந்தப் பரிசுத் தொகையைப் பெறுவதற்காக 16 ஆயிரம் வரி செலுத்த வேண்டும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சிறிது நேரத்தில் ரிசர்வ் வங்கியிலிருந்து வரும் அழைப்பில் சொல்லுவார்கள் என்ற பிறகு லைனில் வந்த பெண் ஒருவர் அதையே வலியுறுத்தியிருக்கிறார்.

அதன்படியே தொடர்பு கொண்ட நபர் ஒருவர் 16 ஆயிரம் ஸ்டேட் வங்கிக் கணக்குக்கு அனுப்புப்படியும், அனுப்பிய பிறகு ரிசர்வ் வங்கிக்கு அதன் விபரத்தை ரிசர்வ் வங்கியின் இ மெயிலுக்கு அனுப்பவேண்டும் என்றும் கூறியவர் எப்போது செலுத்துவீர்கள் என்றும் கேட்டுள்ளார். தொடர்ச்சியாகப் போன் அழைப்பு வந்ததால் சங்கர்ராஜ் தன் வீட்டு நகையை அடகு வைத்து பணம் செலுத்தத் தயாரானவர்,ஏதோ ஒரு சந்தேகத்தில் தன் ஹோட்டல் முதலாளி கணேஷ்குமாரிடம் விசயத்தைச் சொல்ல, அவரோ ஏமாற வேண்டாம் பணம் செலுத்த வேண்டாம் என்று சொன்னதும், தன் முடிவை மாற்றிக் கொண்டார் சங்கர்ராஜ்.

விடாக் கண்டனாக இது குறித்து தொடர் போன் வர, அவர்களிடம் பேசிய கணேஷ்குமார். 4 கோடி பரிசு விழுந்திருப்பதால் வரியாக அதில் 16 ஆயிரத்தைக் கழித்துக் கொண்ட மீதிப் பணத்தைத் தாருங்கள் என்று கொடாக் கண்டனாய்ப் பதிலளித்தவரிடம், பணம் செலுத்தியே ஆகவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப் நம்பர் கொடுங்கள் என்று கேட்டதற்கு மறுத்திருக்கிறது எதிர்முனை.

இந்தத் தொல்லை தாங்க முடியாமல் போன கணேஷ்குமார் இது குறித்து கோவில்பட்டி நகர ஸ்டேட் பேங்க் மேலாளரிடம் தெரிவித்ததில், அவரோ இது போன்ற நடைமுறைகள் ரிசர்வ் வங்கியில் கிடையாது. அவர்களின் நம்பர் டெல்லியிலுள்ள ஒரு பெண்ணின் கணக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிக்குப் புகார் தெரிவித்தவர்கள், சைபர் க்ரைமிலும் புகார் செய்ய உள்ளனர்.

ஆன்லைன் டூபாக்கூர் பரிசு தொடர்பான விடாக்கண்டன் கொடாக்கண்டன் விவகாரம்,நகரைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.