Skip to main content

திடீர் தீயில் சாம்பலான 77 கடைகள்... மின் கசிவா? திட்டமிட்ட சதியா? 

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

 

 

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமாியில் கரோனா ஊரடங்கிற்கு முன்தினம் கூட வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். அதன்பிறகு கரோனா தாக்கம் அதிகரித்ததால் கன்னியாகுமரி சுற்றுலாத்தலம் முடங்கியது. இதனால் அங்கு கடைகள் அமைத்து வியாபாரம் செய்துவந்த வியாபாரிகள் வறுமைக்குத் தள்ளப்பட்டனர். மேலும் முதலீடு செய்து பொருட்களை வாங்கி விற்பனைக்கு வைத்த வியாபாரிகள், நஷ்டத்தில் தள்ளப்பட்டதோடு, வட்டிக் கடன்களும் அவர்களைத் துரத்தியது.

 

இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு சுற்றுலாத் தலங்கள் செயல்படத் தொடங்கியதும் கன்னியாகுமாியிலும் சுற்றுலாப் பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்கினார்கள். இதனால் வியாபாரிகளும் கடைகளைத் திறந்து விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இருந்தாலும் முன்பைப் போல் வியாபாரம் இல்லாமல் தவித்தனர். இதனால் கடைகளில் பொருட்களும் நிரம்பியே இருந்தன. இந்நிலையில், இன்று (9-ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு கடற்கரையையொட்டி காந்திமண்டபம் அருகில் இருந்த 74 நிரந்தரக் கடைகள் மற்றும் 3 தற்காலிகக் கடைகளில் திடீரென்று தீப்பிடித்தது.

 

ஒரு கடையில் பிடித்த தீ, மளமளவென்று காட்டுத்தீ போல் வேகமாக மற்ற கடைகளிலும் பரவியது. கொஞ்ச நேரத்தில் அந்தப்பகுதி புகை மண்டலமாக மாறியது. கடைகளில் இருந்த துணிகள், அலங்காரப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், ஃபேன்சி பொருட்கள், பாசி மாலைகள், செருப்புகள் எரிந்து கரிக்கட்டைகளானது. இவற்றின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் கூறுகின்றனர். அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க, கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய 3 இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி, தீயை அணைத்தனர். அதற்குள் 74 கடைகளும் எரிந்து தரைமட்டமானது.

 

கடைகள் இருந்த இடம் தேவசம்போர்டுக்கு சொந்தமான இடம் என்பதால் வருமானத்துக்கு வேண்டி அங்கு கடைகள் கட்ட அனுமதித்தனர். இதனால் காந்திமண்டபம் அருகில் இருந்து கடல் அழகை சுற்றுலாப் பயணிகள் ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அதனால் அந்த பகுதியில் இவ்வளவு கடைகள் அனுமதிக்கக் கூடாது என்று ஒரு பிரிவினர் எதிர்ப்புக் காட்டி வந்தனர். மேலும் அந்த வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கும் பெரும் இடையூறாகவும் இருந்து வந்தது.

 

இதனால் திடீரென்று அந்த கடைகள் எப்படித் தீப்பிடித்து எரிந்தது. மின் கசிவால் தீப்பிடித்ததா? அல்லது திட்டமிட்ட சதியால் நடந்ததா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு உடனே நோில் சென்ற கலெக்டர் அரவிந்த், எஸ்.பி பத்ரி நாராயண், ஆா்.டி.ஒ. மயில் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்” - இ.பி.எஸ். ஆதங்கம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Make ADMK win at least this time EPS Fear

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27.03.2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க. சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு  ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மக்களவையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க. வேட்பாளர் குரல் கொடுப்பார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க.. அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க. உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தி.மு.க.வினரை தன் குடும்பம் என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?. வாக்குகளை பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க.வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'அப்பாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' - விஜய் வசந்த் நம்பிக்கை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'I will win by a bigger margin than my father' - Vijay Vasant Hope

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியில் போட்டியிடும் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''நான் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறேன். மீண்டும் வெற்றிபெற்று என்னுடைய மக்கள் பணியை மீண்டும் தொடருவேன் என்று நம்பிக்கையோடு இந்த பயணத்தை தொடர்கிறேன். தேர்தலைப் பொறுத்தவரை 2019ல் எனது தந்தை அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த 2024 தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

2024 பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கன்னியாகுமரி என்பது இயற்கை வளம் சார்ந்த பகுதி. குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்த தொகுதியில் நான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்பவர்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா? இந்த தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவுக்கு செய்து கொண்டு வந்திருக்கிறேன். மெதுவாக நடந்து கொண்டிருந்த ரயில்வே ரெட்டிப்பு பாதையை வேகப்படுத்தியிருக்கிறோம். இப்படி பல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல் காரணத்திற்காகவும், தேர்தல் நேரம் என்பதாலும் இப்படி குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்'' என்றார்.