Skip to main content

மதுவில் பூச்சிமருந்து கலந்து கணவருக்கு கொடுத்த மனைவி... தவறான தொடர்பால் நிகழ்ந்த கொலை!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

incident in kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் உள்ளது வீ. பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 40). இவரது மனைவி செல்வி (வயது 35). இருவரும் தினசரி கரும்பு வெட்டும் கூலி வேலைக்குச் சென்று வருபவர்கள். கடந்த 17ஆம் தேதி உடல் அசதியைப் போக்க சுப்பிரமணியன் மது வாங்கி வந்து தனது வீட்டு மாடியில் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டிலில் மீதம் இருந்த மதுவைப் பிறகு குடிக்கலாம் என அங்கேயே வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்று படுத்துக் கொண்டார். மறுநாள் காலை எழுந்ததும் இரவு மீதம் வைத்திருந்த மதுவை எடுத்துக் குடித்துள்ளார். அப்போது மது வாடைக்கு பதிலாக மண்ணெண்ணெய் வாடை அடித்துள்ளது. இதுகுறித்து தனது மகளிடம் மது வாடைக்குப் பதிலாக மண்ணெண்ணெய் வாடை அடிப்பது ஏன் எனக் கேட்டுள்ளார். அவரது மகள் இது குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

 

இருந்தும் மதுவை எடுத்துக் குடித்த சுப்பிரமணியன் அப்படியே புறப்பட்டு கரும்பு வெட்டும் கூலி வேலைக்குச் சென்றுவிட்டார். அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளது. அதன் காரணமாக அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டுக்கு வந்த பிறகும் வாந்தி எடுத்துள்ளார். சந்தேகம் இருந்ததால் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன்  உயிரிழந்தார்.

 

இதுகுறித்து சுப்பிரமணியன் தங்கை இந்திரா தியாகதுருகம் போலீஸில் தனது சகோதரரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகப் புகார் செய்துள்ளார். இவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் சுப்பிரமணியன் மனைவி செல்வியை போலீசார் விசாரணை செய்ததில் அவர் சுப்பிரமணியனை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாரிடம் செல்வி அளித்த வாக்குமூலத்தில், ''எனது கணவரும் நானும் தினசரி கரும்பு வெட்டும் வேலைக்குச் சென்று வருவோம். இந்த நிலையில் எனது கணவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயமுருகன் என்பவரையும் என்னையும் தொடர்புபடுத்தி பேசினார். இதனால் கோபமடைந்த நான் உண்மையாகவே ஜெயமுருகனுடன் பழக ஆரம்பித்தேன். நானும் ஜெயமுருகனும் எனது கணவர் இல்லாத நேரத்தில் தனிமையில் நெருக்கமாக இருப்போம். இப்படிப்பட்ட எங்களின் தொடர்பு எனது கணவருக்குத் தெரிய வந்ததால் என்னை மேலும் அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்தார். இதனால் எங்கள் தொடர்புக்கு இடையூறாக இருந்த எனது கணவரை நானும் ஜெயமுருகனும் தீர்த்துக்கட்ட சந்தர்ப்பம் எதிர்பார்த்து இருந்தோம்.

 

சம்பவத்தன்று எனது கணவர் இரவு சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடிக்குப் படுக்கச் சென்றார். அப்போது அவர் மது குடித்து விட்டு அதில் பாதி மது பாட்டிலில் வைத்திருந்ததை நான் பார்த்தேன். அந்த மது பாட்டிலில் பூச்சி மருந்து கலந்து வைத்துவிட்டால் அந்த மதுவை எப்படியும் அவர் எடுத்துக் குடிப்பார் அதன்மூலம் அவரை சாகடிக்க முடிவு செய்தேன். இதை ஜெயமுருகனிடம் கூறினேன். அவர் உடனடியாகச் சென்று எங்கிருந்தோ பூச்சி மருந்து வாங்கி வந்து கொடுத்தார். அதை யாரும் சந்தேகம் அடையாத வகையில் மது பாட்டிலில் கலந்து வைத்து விட்டேன். நான் எதிர்பார்த்தது போலவே மறுநாள் அந்த மதுவை எனது கணவர் எடுத்துக் குடித்து விட்டார். அதன் காரணமாக அவர் இறந்து விட்டார். இதுகுறித்து யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வராமல் இருக்க நான் கணவரை இழந்தது குறித்து உறவினர்கள் முன்னிலையில் அழுது நாடகமாடினேன்'' என்று வாக்குமூலம் அளித்துள்ளார் செல்வி.

 

இதனையடுத்து செல்வி மற்றும் அவருடன் தவறான தொடர்பில் இருந்த ஜெயமுருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.