incident in kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பு.கிள்ளனூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் என்பவரது மகன் 28 வயது அருள்ராஜ். இவருக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் 22 வயதில் புஷ்பலதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று கிள்ளனூர் கிராமத்தில் உள்ள கம்பு வயலில் அறுவடையில் ஈடுபட்டிருந்த புஷ்பலதா என்பவர் மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றவர் மீண்டும் வயலுக்கு வரவில்லை. எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது மாயமாக இருந்தது. அவருடன் வேலை செய்தவர்கள் அக்கம்பக்கத்தில் சென்று தேடியபோதும் புஷ்பலதா கிடைக்கவில்லை.

அறுவடைநிலத்திலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக புஷ்பலதா சடலமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது. அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அங்கு ஓடிச்சென்று பார்த்தனர். உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் புஷ்பலதா சடலத்தை கிணற்றிலிருந்து மீட்டனர். பின்னர் அவரது உடலை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் ராமலிங்கம் தன் மகள் புஷ்பலதா இறப்பு குறித்து கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புஷ்பலதாவுக்கு திருமணமாகி ஆறு மாதமே ஆவதால் இவரது மரணம் குறித்து விசாரணை செய்யுமாறு உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி விஜயகுமார், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய் வர்தினி அவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

கோட்டாட்சியர் விசாரணைக்கு பிறகே புஷ்பலதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது. வரதட்சணை கொடுமையா? கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும். வயலில் வேலைக்கு சென்றவர் கிணற்றில் பிணமாக மிதந்தது பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment