
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் சாலையோரம் கை, கால்கள் கட்டப்பட்டு பல வெட்டுக் காயங்களுடன் சுடிதாரைக் கொண்டு சுற்றிக் கட்டப்பட்டு இளைஞர் ஒருவரின் உடல் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக இந்த சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில், சேலையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெயர் சூர்யா என்பதும், அவர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவந்தது.
சேலையூரில் எலெக்ட்ரீயசனாக வேலை பார்த்து வந்த சூர்யா (25), தான் காதலித்து வந்த பெண்ணுடன் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததாகவும், அங்கு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த காரணத்திற்காக சூர்யா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.