Incident happened while going for investigation in thirunelveli district

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (72). இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் சந்திரசேகர் (37). இவர்களுக்கும், லட்சுமணனின் அண்ணன் மகன் ராஜசேகர் என்பவருக்கும் பூர்வீக நிலம் சம்பந்தமாக தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், அந்த பூர்வீக நிலத்தில் பயிரிடுவதற்காக ராஜசேகரிடம் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த பசுங்கிளி என்பவர் பாத்தியம் பெற்று இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறியாத லட்சுமணனும், சந்திரசேகரும் அந்த நிலத்தில் விவசாயம் செய்வதற்கான ஏற்பாடுகளைச்செய்து வந்துள்ளனர். இதனைக் கண்ட பசுங்கிளி, லட்சுமணன் தரப்பிடம் இது பற்றி முறையிட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisment

அதனால், இந்த சம்பவம் தொடர்பாக பசுங்கிளி, மணிமுத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக லட்சுமணனையும், சந்திரசேகரையும் காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளனர். அங்கு வந்த அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திடீரென்று, எங்களது பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்ய எங்களுக்கு உரிமை இல்லையா? என்று கூறி தாங்கள் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து 2 பேரும் குடித்தனர்.இதனால், அங்கிருந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர், 2 பேரும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்நிலையத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் விஷம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.