Skip to main content

ஏழு குடும்பங்களை வேலிவைத்து அடைத்த சம்பவம்...பதற்றத்தில் மக்கள்...!

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

The incident that fenced off seven families

 

குடிநீர் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த 7 தலித் குடும்பங்களை வெளியே வரமுடியாத வகையில் கம்பி வேலிகொண்டு பொது பாதை அடைக்கப்பட்டுள்ள அவலநிலை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மடப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பத்து தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். அவரது மனைவி மடப்புரம் ஊராட்சி மன்றத் தலைவியாக இருந்து வருகிறார்.

 

இந்தச் சூழலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் வசிக்கும் கள்ளத்திடல் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த வாரம் வாழக்கரையில் இருந்து குடிநீர் குழாய் பதிக்கும் பணியை தொடங்கினர். இந்த நிலையில் கோவில்பத்து தெரு அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்கு அதே பகுதியைச் சேர்ந்த சபாநாதன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ரமேஷ் தரப்பிற்கும், சபாநாதன் தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ரமேஷ் மீது திருக்குவளை போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். 

 

The incident that fenced off seven families

 

இந்த நிலையில், குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்த சபாநாதன் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று கள்ளத்திடல் பகுதியில் வசிக்கும் ரமேஷ் உட்பட 7 குடும்பத்தினர் செல்லும் பாதையைக் கம்பி வேலி கொண்டு அடைத்துள்ளார். ஆற்றங்கரையை ஓட்டி கம்பி வேலி கொண்டு அடைக்கப்பட்டிருப்பதால், 7 குடும்பங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் வெளியே செல்லமுடியாமல் தவிக்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்லவும், குடிநீர் எடுத்து செல்லவும், குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 

 

இதைப் பற்றி அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், “நாங்கள் தலித் மக்கள் என்பதால் கம்பி வேலி கொண்டு அடைத்து தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். சபாநாதன் மீது திருக்குவளை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்கிறார்கள். வேலி அடைக்கப்பட்டுள்ள இடத்தில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த பாதையை தற்போது அடைத்துள்ள சபாநாதன், அந்த இடங்கள் அனைத்தும் தன்னுடைய பட்டா நிலம் என்று காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 

 

The incident that fenced off seven families

 

அரசு புறம்போக்கு இடம் அவருடையது என்றாலும், எஞ்சியுள்ள ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் புறம்போக்கு இடத்தில் குடிநீர் குழாய் கொண்டு வந்து, குடிநீர் கிடைக்க வழிவகை செய்து, வேலியை அகற்றி தர வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.