Skip to main content

சினிமா பார்க்க சென்ற குடும்பத்தினர் மீது தாக்குதல்; போராட்டத்திற்கு தயாராகும் சமூகநல அமைப்புகள்

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

incident on the family who went to the cinema Protest against the police

 

சிதம்பரம் நகரில் திரையரங்கிற்கு வெள்ளிக்கிழமை இரவு சினிமா பார்க்கச் சென்ற குடும்பத்தினரை, திரையரங்கு ஊழியர்கள் தாக்கியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யாசாமி மகன் சிரஞ்சீவி (29) மற்றும் அவரது அண்ணன் பழனிசாமி மற்றும் ராமராஜன், பானுமதி, லட்சுமி, குழந்தைகள் கார்த்திகேயன், சந்தோஷினி ஆகியோருடன் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணி காட்சி சிதம்பரம் வடுகநாதன் தியேட்டரில் சினிமா பார்க்க சென்றுள்ளனர்.

 

அப்போது டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே சென்ற பொழுது அங்குள்ள ஊழியர்கள் சிரஞ்சீவி என்பவரை நீ குடித்து இருக்கிறாயா என்று கேட்டுள்ளார்கள். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் குடிப்பழக்கம் இல்லை என்றும், நீங்கள் தான் குடித்து உள்ளீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திரையரங்கு ஊழியர்கள் அரவிந்தன்,  சுகந்தன்,  ராகுல்,  மாதவன் உள்ளிட்டோர்  சேர்ந்து சீரஞ்சிவி அவரது அண்ணன் பழனிசாமி, ராமராஜன் ஆகியோரை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர்.

 

இதில் படுகாயமடைந்த சிரஞ்சீவி, பழனிசாமி, ராமராஜன்  ஆகியோர் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிரஞ்சீவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 6 தையல்கள் போடப்பட்டுள்ளது. இது குறித்து சிரஞ்சீவி கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிதம்பரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சுகுந்தன் (22), மேல வன்னியூர் விளத்தூர் கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராகுல் (22), சிவபுரி வடபாதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் அரவிந்தன் (38), புளியங்குடி இந்திரா நகரைச் சேர்ந்த தமிழ்மாறன் மகன் மாதவன் (22) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் ஆர்.சுகுந்தன் மற்றும் ஆர்.ராகுல், மாதவன், அரவிந்தன்  4 பேரை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இந்த நிலையில், அந்த திரையரங்கு உரிமையாளர் சுப்பையா, தமிழ்நாடு திரைப்படத் துறையில் உயர் பதவியில் உள்ளதால் அவர் அழுத்தத்தின் காரணமாக காவல்துறையின் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் சிதம்பரம் காவல் துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பாமலேயே  நேற்று (18-11-23) இரவு 11 மணிக்கு வெளியே விட்டு விட்டனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காவல்துறையின் இந்த செயலுக்கு கடுமையாக கண்டனங்களை தெரிவித்து, நகர செயலாளர் ராஜா, மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகள், சிதம்பரம் நகர காவல் துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். அதற்கு முன்னோட்டமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.