Skip to main content

உயிரை பறித்த பிறந்தநாள் பார்ட்டி...!!!

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

ஈரோடு மாவட்டம்  மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளி காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது  மனைவி அழகரசி.  இவர்களது ஒரே மகன் அலெக்சாண்டர் 14 வயது. அவல்பூந்துறை அருகே  உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

அலெக்சாண்டர் தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் பள்ளி முடிந்து  நேற்று மாலை 5 மணி அளவில் அவனது நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள ஒரு தோட்டத்திற்கு போயுள்ளார்கள். அங்கு வைத்து கேக் வெட்டி கொண்டாடினார்கள்.  அப்போது அலெக்சாண்டரின் சட்டையில் கேக் ஒட்டியது. அதை சுத்தம் செய்வதற்காக தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் அலெக்சாண்டர் மட்டும் இறங்கியுள்ளார். குனிந்து தண்ணீரை எடுத்து சுத்தம் செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்து விட்டார்.

 

incident in erode... police investigation


இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர் அக்கம் பக்கத்தில் இருந்த சில இளைஞர்கள் கிணற்றில் குதித்து மாணவனை மீட்க முயன்றனர்.  ஆனால் அவர்களால் முடியவில்லை. பிறகு மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து கிணற்றில் மாணவனை தேடினர். ஆனால் இறுதியில் சிறிது நேரத்திற்கு பிறகு அலெக்சாண்டர் உடல் இறந்து போன நிலையில்  மீட்கப்பட்டது.

இது சம்பந்தமாக அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மாணவர் அலெக்சாண்டர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு  கொண்டுவரப்பட்டது. மாணவனின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு வந்து அவர்கள் மாணவன் சாவில் மர்மம் இருப்பதாக  கூறி உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இது குறித்து தகவல் கிடைத்ததும்  போலீசார் மாணவனின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு இறந்த மாணவன் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.

பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட இந்த சோக நிகழ்வு அந்த பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.

சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.