
கோழிக்கறி சாப்பிட்ட கட்டிடத் தொழிலாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள கூச்சிக்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான சுப்பிரமணியன். இவர் வீட்டுக்கு அருகில் உள்ள முனிராஜ் என்பவரின் வீட்டில் கோழிக்கறி குழம்புடன் சாதம் சாப்பிட்ட நிலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மூச்சுத்திணறினார். மேலும் அவரது வாயில் ரத்தம் வெளியானதால் அதிர்ந்த உறவினர்கள் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சுப்பிரமணியன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவரின் உயிரிழப்புக்குக் காரணம் கோழிக்கறியா அல்லது மாரடைப்பா எனத் தெரியாத நிலையில், அந்தியூர் போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். எனினும் அவரின் உடல் உறுப்புகள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பபட்ட நிலையில் அதன் முடிவுகள் வந்தால்தான் இறப்புக்கான காரணம் முழுமையாகத் தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.