Skip to main content

கொள்ளையடிக்கும் அதிகாரிகள்.... -காத்திருக்கும் கொடூர விபத்துகள்...!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

INCIDENT IN ERODE

 

பல மாதங்களுக்குப் பிறகு, கடந்த 1 ஆம் தேதி முதல், குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் விபத்துகள் என்ற வேதனையான சம்பவங்களும் நிகழத் தொடங்கியுள்ளது.
 

ஈரோடு மாவட்டம் சிவகிரி பேருந்து நிலையத்தில் இருந்து, வியாழக்கிழமை காலை ஈரோடு நோக்கி அரசு நகரப் பேருந்து (எண்: 42) வந்துகொண்டு இருந்தது. அப்போது லக்காபுரம் என்ற இடத்திற்கு அருகே பேருந்து திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து பேருந்தை அப்புறப்படுத்தியபோது பேருந்தின் அடிப்பகுதியில் அந்த இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் அதில் பயணித்த நான்கு பேர் பரிதாபமாக இறந்துகிடந்தனர்.

 

மேலும் பேருந்தில் பயணித்த, மூன்று பயணிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

INCIDENT IN ERODE


காவல்துறை விசாரணையில், விபத்தில் இறந்தவர்கள் மொடக்குறிச்சி அருகே ஆளூத்துப்பாளையம் என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள பரமசிவபுரம் பகுதியைச் சேர்ந்த மோகம்புரி, அவர் மனைவி மரகதம், அவரது மாமியார் பாவையம்மாள், மரகதத்தின் சகோதரர் பாலசுப்பிரமணி என்று தெரியவந்தது. பேருந்தில் பிரேக் செயல்படாததால் இந்த விபத்து நேரிட்டது எனக் கூறப்படுகிறது.


கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட மூன்றாவது நாளிலேயே நடந்தேறிய இந்தப் பேருந்து விபத்து பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் முறைப்படி இடதுபுறம் சாலை ஒரமாகத் தான் வந்துள்ளார்கள். எதிரே வந்த அரசுப் பேருந்து திடீரென வலது புறம் திரும்பும் என யாருக்கும் தெரியாது. ஆனால், அந்தப் பேருந்து சாலையில் செல்ல செல்ல வலதுபுறம் திரும்பியிருக்கிறது. ஒட்டுனரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்துவிட்டது. இந்த விபத்து ஏற்படாமல் தவிர்த்திருக்கமுடியும். ஆனால் போக்குவரத்து நிர்வாகம் அதைச் செய்யவில்லை என இதில் மறைக்கப்பட் விஷயத்தை நம்மிடம் கூறினார் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி ஒருவர்,


"ஏறக்குறைய ஐந்து மாதங்கள், இடையில் ஒரு மாதம் சில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டது. பணிமனையில் நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளின் உறுதித் தன்மையைப் பரிசோதிக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை. பிரேக், ஆக்சிலேட்டர், கியர், டயர்களின் கண்டிஷன், இஞ்சின் செயல்பாடு என எல்லாவற்றையும் தொழில்நுட்ப மெக்கானிக் மூலம் பரிசோதனை செய்து, ஒவ்வொரு பேருந்துகளையும் குறிப்பிட்ட தூரம் ஓட வைத்து, எல்லாவற்றையும் முறையாகச் செய்திருந்தால் இப்படி ஒரு கொடூர விபத்து நடந்திருக்காது. ஆனால் எல்லாவற்றையும் செய்ததாக போலிக் கணக்கு காட்டி இந்தக் கரோனா காலத்திலும் போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் கொள்ளையடித்து வருகிறார்கள். விபத்துக்குள்ளான பேருந்து ஹேண்டில் வளைவுக்கு அடியில் ஒரு இரும்பு ராடு உடைந்திருக்கிறது. நீண்ட காலம் பயன்படுத்தாமல் இருந்ததால் துருபிடித்து அது உடைந்துள்ளது.

 

Ad

 


இந்த விபத்து ஒரு அபாய மணியை அடித்துள்ளது என்பதே உண்மை. 7 -ஆம் தேதி முதல் அனைத்து பேருந்துகளும் சாலைகளில் இயங்க உள்ளது. ஒவ்வொரு பேருந்துகளிலும் உள்ள அத்தனை பாகங்களையும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். இல்லையேல் இதுபோன்ற விபத்துகள் தவிர்க்க முடியாது" என்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.