ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கேசரிமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அருண்சகாயராஜ். இவர் 31 ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடு பெரியசேமூர் ராம்நகர் பகுதியில் அவரது நண்பர் ஒருவருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் என்கிற குட்டசாக்கு என்பவர் அவரது நண்பர்கள் மூன்று பேருடன் அவ்விடத்திற்கு வந்து அருண்சகாயராஜிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார்.அதற்கு அருண் சகாயராஜ் பணம் கொடுக்க மறுத்துவிட ஆத்திரமடைந்த குட்டசாக்கு கத்தியைக் காட்டி மிரட்டி ரூபாய் 700 ஐ அவரிடமிருந்து வழிப்பறி செய்து பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து அருண்சகாயராஜ் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இந்தநிலையில் நேற்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி விசாரணை நடத்தியபோது அவர் குட்டசாக்கு என்பதும் அருண்சகாயராஜிடம் வழிப்பறியில் ஈடுபட்டதையும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குட்டசாக்கு மீது ஏற்கனவே ஐந்துக்கும் மேற்பட்ட வழிப்பறி திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருக்கும் மற்ற இரண்டு பேரையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மது குடிப்பதற்காக வழிப்பறி திருட்டில் ஈடுபடும் இளைஞர்கள் இப்போது அதிகமாகிவிட்டனர் என்கின்றனர் போலீசார்.