ஈரோடு மாவட்டம் கோபி நாகமலை எக்ஸ்டென்சன் வாய்க்கால் சாலையைச் சேர்ந்தவர் விஜயகுமார்(34). கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன் விஜயகுமாருக்கு ஏற்பட்ட விபத்தில் மார்பு மற்றும் கணையம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்தார். இருப்பினும் தொடர்ந்து வலி இருந்து வந்தது. இதனால், மது பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார், கடந்த 5 ஆம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் விஜயகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசைபுரத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (65). விவசாயி. குப்புசாமி மது குடிக்கும் பழக்கம் உடையவர். குப்புசாமி கடந்த சில நாட்களாக மதுப் பழக்கத்தை விட முடியாமல் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு குப்புசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தாளவாடி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.