Skip to main content

திண்டுக்கல் அருகே 300 கிலோ கஞ்சாவுடன் 7 பேர் கைது! வாகனம் பறிமுதல்!!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

incident in dindigul

 

திண்டுக்கல் அருகே 300 கிலோ கஞ்சாவுடன் 7 பேரை போலீஸார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கம்பம், மெட்டு, வருஷநாடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் கஞ்சா பயிரிட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர்.

இதனைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். டி.ஐ.ஜி. முத்துச்சாமி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கம்பம் வீரபாண்டி பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 300 கிலோ கஞ்சாவுடன், கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கும்பலாக இயங்கி பல்வேறு பகுதிகளிலிருந்து கஞ்சா கடத்தி, வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.

 

incident in dindigul


அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவி பிரியா அறிவுறுத்தலின் பேரில், தனிப்படை போலீசார் மாவட்ட எல்லைகளில் சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் வடமதுரை அருகே தங்கட்டி சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் 200 கிலோ கஞ்சா விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

மேலும், திண்டுக்கல் சீலப்பாடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 100 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சரக்கு வாகனம் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக திண்டுக்கலைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, சோண முத்து, பரணி, ஜெய்சங்கர், ராகவன், யுவராஜ், மற்றும் பாடியூர் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆண்டியப்பன் ஆகியோரை கைது செய்து வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.

கஞ்சா எங்கிருந்து வாங்கப்பட்டது, விற்பனைக்காக எங்கு கொண்டு சென்றனர் என்பது  குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.