பெண்ணாடம் அருகே பா.ம.க பிரமுகர் அடித்து கொலை... தந்தை,மகன் கைது!

incident in cuddalore penndam

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து என்பவருக்கு ராஜவேல்(65), கோவிந்தசாமி(60), அர்ச்சுணன்(55) என 3 மகன்கள் உள்ளனர். இதில் கோவிந்தசாமி மட்டும் பெண்ணாடம் அருகேயுள்ள குறுக்கத்தஞ்சேரி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ராஜவேல் மற்றும் அர்ச்சுணன் இருவரும் வெண்கரும்பூரில் வசித்து வருகின்றனர். அர்ச்சுணன் பா.ம.கவின் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தில் கடலூர் மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சில நாட்களிலேயே மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில் அர்ச்சுணன் மட்டும் தனிமையில் வசித்து வருகிறார். அதனாால் அண்ணன் ராஜவேல் மற்றும் அவரது மகன் அண்ணாதுரை(42) இருவரும் அர்ச்சுணனிடம், 'உனக்கு தான் குழந்தை இல்லையே... உனது பாகத்திலுள்ள நிலத்தை எங்களுக்கு எழுதிக்கொடு' எனக் கேேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். அதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (09.10.2020) இரவு மீண்டும் இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜவேல், அவரது மகன் அண்ணாதுரை இருவரும் சேர்ந்து அர்ச்சுணனை கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர். அதில் அர்ச்சுணன் தலையின் பின்புறத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி மற்றும் போலீசார் இறந்துபோன அர்ச்சுணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ச்சுணனின் அண்ணன் ராஜவேல் மற்றும் அவரது மகன் அண்ணாதுரை ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக தம்பியை அண்ணனும், சித்தப்பாவை அண்ணன் மகனும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cuddalore pennadam pmk police
இதையும் படியுங்கள்
Subscribe