Skip to main content

பெண்ணாடம் அருகே பா.ம.க பிரமுகர் அடித்து கொலை... தந்தை,மகன் கைது!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020
incident in cuddalore penndam

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள  வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து என்பவருக்கு ராஜவேல்(65), கோவிந்தசாமி(60), அர்ச்சுணன்(55) என 3 மகன்கள் உள்ளனர்.  இதில் கோவிந்தசாமி மட்டும் பெண்ணாடம் அருகேயுள்ள குறுக்கத்தஞ்சேரி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ராஜவேல் மற்றும்  அர்ச்சுணன் இருவரும் வெண்கரும்பூரில் வசித்து வருகின்றனர். அர்ச்சுணன் பா.ம.கவின் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தில் கடலூர் மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சில நாட்களிலேயே மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில் அர்ச்சுணன் மட்டும் தனிமையில் வசித்து வருகிறார். அதனாால் அண்ணன் ராஜவேல் மற்றும் அவரது மகன் அண்ணாதுரை(42) இருவரும் அர்ச்சுணனிடம்,  'உனக்கு தான் குழந்தை இல்லையே... உனது பாகத்திலுள்ள  நிலத்தை எங்களுக்கு எழுதிக்கொடு' எனக் கேேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். அதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (09.10.2020) இரவு மீண்டும் இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது  ராஜவேல்,  அவரது மகன் அண்ணாதுரை  இருவரும் சேர்ந்து அர்ச்சுணனை கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர். அதில் அர்ச்சுணன் தலையின் பின்புறத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி மற்றும் போலீசார்  இறந்துபோன அர்ச்சுணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ச்சுணனின் அண்ணன் ராஜவேல் மற்றும் அவரது மகன் அண்ணாதுரை ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக தம்பியை அண்ணனும், சித்தப்பாவை அண்ணன் மகனும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.