Skip to main content

ஒருதலைக் காதல் டார்ச்சர்!  மாணவி தீக்குளித்து தற்கொலை!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குறுக்கத்தன்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் வீரமணி - செண்பகவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் இரண்டு ஆண்பிள்ளைகள் உள்ளனர்.  இப்பெண்கள் இருவரும் திட்டக்குடி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகின்றனர்.  இந்நிலையில் இவர்களின் இரண்டாவது பெண்ணான திவ்யதர்ஷினி கல்லூரியில் படித்து வரும் நிலையில்,  அதே  கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் தொடர்ச்சியாக திவ்யதர்ஷினியை பின் தொடர்ந்து,  காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு   உறவுமுறையில் நாம் இருவரும்  அண்ணன் தங்கை என்றும், காதலிக்க முடியாது என்றும் திவ்யதர்ஷினி மணிமாறனிடம்  பலமுறை எடுத்து கூறி மறுத்துள்ளார்.  

 

incident in cuddalore


இந்நிலையில்  மணிமாறன் நேற்று மீண்டும் தன்னை காதலிக்க வேண்டும் என்றும்,  உனது பெயரை கையில் பச்சை குத்திக்க போறேன் என்றும்,  கைகளில் கிழித்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும்  மிரட்டியுள்ளார்.  இதனால் மனமுடைந்த திவ்யதர்ஷினி தனது தாய் மற்றும் சகோதரியிடம் இதுபற்றி கூறியுள்ளார்.  இது பற்றி எவ்வித கவலையும் அடைய வேண்டாம் நான் பார்த்து கொள்கிறேன் என்று மனதை திடப்படுத்தியுள்ளனர் குடும்பத்தினர்.  

 

incident in cuddalore


அதேசமயம்  இன்று காலை கல்லூரி செல்வதற்கு போதிய பணம் இல்லாததால் வீட்டில் இருந்துள்ளார் திவ்யதர்ஷினி. அப்போது வீட்டைவிட்டு பெற்றோர்கள் வெளியே சென்றதும் மிகுந்த மனவேதனையில் இருந்த திவ்யதர்ஷினி வீட்டிற்குள் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்து உடல் தீக்காயங்களுடன் இருந்த திவ்யதர்ஷினியை  மீட்டு,  விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று (12.12.2019) இரவு திவ்யதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெற்று வளர்த்த மகள் பாதியிலேயே தன் வாழ்வை முடித்து கொண்டதை நினைத்து 'கல்லூரிக்கு செல்லும்போது அக்கம்பக்கத்தினரிடம், 20 , 30 ரூபாய் பிச்சை எடுத்து பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புவதாகவும், வேகாத வெயிலில் கஷ்டப்பட்டாலும் கல்லூரிக்கு செல்லும் மகள்களுக்கு நல்ல சாப்பாடு  சமைத்து அனுப்பும் போதும், தனது மகள் நல்ல நிலைமைக்கு வருவாள் என்று பலவித கனவுகள்  இருந்த நிலையில் காதல் என்ற பெயரால் தன் மகளை வேதனை அடைய செய்து தற்கொலைக்கு  கொண்டு சென்றவனை தண்டிக்க வேண்டும் என்றும், தன் பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அவரது பெற்றோர்கள் கதறி அழும் காட்சி பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது.

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் வழக்குபதிந்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.