கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குறுக்கத்தன்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் வீரமணி - செண்பகவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் இரண்டு ஆண்பிள்ளைகள் உள்ளனர். இப்பெண்கள் இருவரும் திட்டக்குடி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் இரண்டாவது பெண்ணான திவ்யதர்ஷினி கல்லூரியில் படித்து வரும் நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் தொடர்ச்சியாக திவ்யதர்ஷினியை பின் தொடர்ந்து, காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு உறவுமுறையில் நாம் இருவரும் அண்ணன் தங்கை என்றும், காதலிக்க முடியாது என்றும் திவ்யதர்ஷினி மணிமாறனிடம் பலமுறை எடுத்து கூறி மறுத்துள்ளார்.

incident in cuddalore

Advertisment

Advertisment

இந்நிலையில் மணிமாறன் நேற்று மீண்டும் தன்னை காதலிக்க வேண்டும் என்றும், உனது பெயரை கையில் பச்சை குத்திக்க போறேன் என்றும், கைகளில் கிழித்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த திவ்யதர்ஷினி தனது தாய் மற்றும் சகோதரியிடம் இதுபற்றி கூறியுள்ளார். இது பற்றி எவ்வித கவலையும் அடைய வேண்டாம் நான் பார்த்து கொள்கிறேன் என்று மனதை திடப்படுத்தியுள்ளனர் குடும்பத்தினர்.

incident in cuddalore

அதேசமயம் இன்று காலை கல்லூரி செல்வதற்கு போதிய பணம் இல்லாததால் வீட்டில் இருந்துள்ளார் திவ்யதர்ஷினி. அப்போது வீட்டைவிட்டு பெற்றோர்கள் வெளியே சென்றதும் மிகுந்த மனவேதனையில் இருந்த திவ்யதர்ஷினி வீட்டிற்குள் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்து உடல் தீக்காயங்களுடன் இருந்த திவ்யதர்ஷினியை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று (12.12.2019) இரவு திவ்யதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெற்று வளர்த்த மகள் பாதியிலேயே தன் வாழ்வை முடித்து கொண்டதை நினைத்து 'கல்லூரிக்கு செல்லும்போது அக்கம்பக்கத்தினரிடம், 20 , 30 ரூபாய் பிச்சை எடுத்து பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புவதாகவும், வேகாத வெயிலில் கஷ்டப்பட்டாலும் கல்லூரிக்கு செல்லும் மகள்களுக்கு நல்ல சாப்பாடு சமைத்து அனுப்பும் போதும், தனது மகள் நல்ல நிலைமைக்கு வருவாள் என்று பலவித கனவுகள் இருந்த நிலையில் காதல் என்ற பெயரால் தன் மகளை வேதனை அடைய செய்து தற்கொலைக்கு கொண்டு சென்றவனை தண்டிக்க வேண்டும் என்றும், தன் பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அவரது பெற்றோர்கள் கதறி அழும் காட்சி பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது.

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் வழக்குபதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.