சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் தேங்கி இருந்த நேரத்தில் சாலையோரமாக செல்ல முயன்ற பொழுது புதைக்கப்பட்ட மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என கேள்விகள் எழுந்துவந்த நிலையில், தங்களுக்கு சம்பந்தமில்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மாநகராட்சியின் தெருவிளக்கு மின்கம்பியை மிதித்தவர் தான் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகவும், மின் இணைப்பு பெட்டி வரை மின்சாரத்தை வினியோகம் செய்வது தான் தங்கள் பணி என மின்சார வாரியம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
மேலும் பெண் இறந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பு விளக்கமளித்துள்ளது. புளியந்தோப்பில் நடந்த இந்த விபத்து எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து எனவும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி தரப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வயலில் மின் வயர் அறுந்து விழுந்த நிலையில்,தெரியாமல் அதை மிதித்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டுக்கு அருகே செல்லும் மின் வயர் திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதை அறியாத பேச்சியம்மாள் அவ்வழியாகச் சென்ற போது அறுந்து விழுந்து கிடந்த வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த மின்சார வயர் ஏற்கனவே பலமுறை தாழ்வாக இருந்ததாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.