incident in Chengalpattu

Advertisment

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவி முகத்தில் காயங்களுடன் சந்தேக மரணமடைந்த நிலையில், இது தொடர்பாக இரண்டு இளைஞர்களைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதுதொடர்பாக அவரது உறவினர்களும் பெற்றோரும் அந்தக் கிராமம் முழுவதும் சிறுமியைத் தேடியும் கிடைக்காததால்,நேற்று (29.06.2021) காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஒரு வீட்டின் அருகே உள்ள முட்புதர்களுக்கு இடையில்பலத்தக் காயங்களுடன் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அச்சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். கைப்பற்றப்பட்ட சிறுமியின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

Advertisment

இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். வீட்டிலிருந்து வெளியே சென்ற பிறகு சிறுமிக்கு என்ன ஆனது, எதனால் சிறுமி உயிரிழந்தார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், சந்தேகத்தின் பெயரில் அதே ஊரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைப் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முறையான பிரேதப் பரிசோதனை செய்து அறிக்கை வந்த பிறகே இச்சம்பவத்தில் உண்மைத்தன்மை தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுமியின் முகம் சிதைக்கப்பட்டிருப்பதால் இது கண்டிப்பாக கொலையாகத்தான் இருக்கும் என்ற அடிப்படையில் போலீசார் அந்த இரண்டு இளைஞர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முகம் சிதைக்கப்பட்டு சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.