The incident that caused excitement in Tower Park

சென்னையில் அண்ணா நகர் டவர் பூங்காவில் கம்பிகளுக்கிடையே பெண் குழந்தையின் தலை சிக்கிக்கொண்ட நிலையில் பெற்றோர்களே போராடி மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று அண்ணா நகர் டவர் பூங்கா. கடந்த 2011 ஆம் ஆண்டு மறுபுனரமைப்பு பணிக்காக பொதுமக்கள் பூங்காவிற்குள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் டவர் பூங்கா திறக்கப்பட்டிருந்தது. அன்றிலிருந்து டவர் பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகமானோர் பூங்காவிற்கு வந்திருந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் பெற்றோர் ஒருவர் நான்கு வயது பெண் குழந்தையுடன் பூங்காவிற்கு வந்துள்ளனர்.அப்போது அங்கே சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது இரும்பு கம்பிகளுக்கு இடையே பெண் குழந்தையின் தலையானது சிக்கிக் கொண்டது. இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்தனர். குழந்தையின் தலையை வெளியே எடுக்க முடியாமல் போராடி வந்தனர். இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடியது. அங்கு இருந்தவர்கள் குழந்தை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். பெற்றோர்களே தொடர்ந்து முயற்சித்து குழந்தையை மீட்டனர். அதைத்தொடர்ந்து குழந்தை முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்ணா நகர் போலீசாரும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.