Skip to main content

சேலம் சிறையில் கைதிகளிடையே மோதல்! 

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

Clash between prisoners at Salem jail!


சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

கோவை மாவட்டம், சரவணம்பட்டி காவல் சரகத்திற்குள் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிகள் சிவா என்கிற பாபு, அமர்நாத் உள்ளிட்ட பத்து பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. 

 

இந்நிலையில், சிறைக்குள் அவர்கள் சட்ட விரோதமாக செல்போன் பயன்படுத்தி வந்துள்ளனர். அதை சிறை வார்டன் கார்த்திக் என்பவர் கண்டுபிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவாவும், அமர்நாத்தும் பல் துலக்கும் பிரஷ்ஷால் கார்த்திக்கை கடந்த ஏப். 18- ஆம் தேதியன்று, சிறை வளாகத்தில் வைத்து சரமாரியாக தாக்கினர். 

 

சக வார்டன்கள் விரைந்து வந்து கார்த்திக்கை மீட்டனர். அவர் அளித்த புகாரின்பேரில் அஸ்தம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் சிவா, அமர்நாத் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவாவை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கும், அமர்நாத்தை திருச்சி மத்திய சிறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

 

இந்த நிலையில், மே 2- ஆம் தேதி காலை, சிறை கைதி ஒருவரை சக கைதிகள் தாக்கிய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் நடந்த கொலை வழக்கில் கைதான கார்த்தி, யுவராஜ், லெனின் ஆகிய மூன்று பேர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். திங்கள்கிழமை (மே 2) காலை மற்றொரு கைதி, தவறுதலாக லெனின் மீது இடித்து விட்டதாக கூறப்படுகிறது. 

 

இதனால் ஆத்திரம் அடைந்த லெனினின் கூட்டாளிகள், அந்த கைதியை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்த சிறை வார்டன்கள் அவரை மீட்டு, சிறை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தாக்குதல் நடத்திய மூன்று கைதிகளையும் பிடித்து தனி அறையில் அடைத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இதுகுறித்து சிறை வார்டன்கள் தரப்பில் கூறுகையில், ''ஒவ்வொரு கைதியையும் தனித்தனி பிரிவில் அடைக்க வேண்டும். சிறைக்குள் உயர் பாதுகாப்புப் பிரிவு, தண்டனை கைதிகள் பிரிவுகள் உள்ளன. சமீப காலமாக தனித்தனியாக அடைக்காமல் ஒரு சில அதிகாரிகள் கைதிகளை தங்கள் இஷ்டப்படி அடைத்து வைத்துள்ளனர். போதிய கண்டிப்பு இல்லாததால் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன,'' என்றனர். 

 

கைதிகள் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து சிறைத்துறை நிர்வாகமும், கோட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது. சேலம் சிறையில் சமீக காலமாக அரங்கேறி வரும் கைதிகள் மோதல், கைதிகளுக்கும் வார்டன்களுக்கும் இடையேயான மோதல் சம்பவங்களால் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.