அரியலூர் மாவட்டம், தூத்தூர் காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணி செய்துவருபவர் மணிவண்ணன். இவர் பணி முடிந்தது வரும்போது, முட்டுவாஞ்சேரி என்ற ஊர் அருகே 3 பேர் கொண்ட கும்பல் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிவண்ணன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி போலீசார் விசாரணை செய்ததில் அப்பகுதியை சேர்ந்த சந்திரசேகரன், சதீஷ், ராம்கி ஆகிய மூன்று பேர் மணிவண்ணனை தாக்கியுள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சதீக்ஷை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற இருவரும் தலைமறைவாகி விட்ட நிலையில் அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணையில் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஒருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு தூத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் சந்திரசேகர் தாயாரை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமான புகாரில் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்தவர் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் அவரிடம் தனது தாயார் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று சந்திரசேகர் முயற்சி செய்துள்ளார். சந்திரசேகர் சொல்லியதை மீறி சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனால் மணிவண்ணன் மீது சந்திரசேகர் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மணிவண்ணன் காவல்நிலையத்தில் பணி முடிந்து சிந்தாமணிக்கு (அவரது சொந்த ஊர் சிந்தாமணி) வரும்போது முட்டுவாஞ்சேரி அருகே டூவீலரை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சந்திரசேகர், சதீஷ், ராம்கி ஆகிய மூவரும் அந்த வழியே வந்துள்ளனர். மணிவண்ணனை பார்த்த சந்திரசேகர் அவரிடம் சென்று என் தாயார் மீது வேண்டுமென்றே வழக்குப்பதிவு செய்தது ஏன் என்று கேட்டுள்ளார். அதனால் சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கும், சந்திரசேகருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.
அப்போது சந்திரசேகர், சதீஷ், ராம்கி ஆகிய மூவரும் சேர்ந்து மணிவண்ணனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் மணிவண்ணன் நடக்க முடியாத அளவுக்கு காயமடைந்துள்ளார். இதற்குள் அக்கம் பக்கத்தினர் அவ்வழியே வர மூவரும் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் விக்கிரமங்கலம் போலீசாருக்கு தெரிய வரவே அவர்கள் மணிவண்ணனை ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக மாவட்ட எஸ்பி சீனிவாசன் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை செய்துள்ளார். சந்திரசேகரன், சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் இருவரும் தூரத்து உறவு முறை என்று கூறுகின்றனர். இது சம்பந்தமாக விக்கிரமங்கலம் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.