Skip to main content

தையல் போட்ட துப்புரவுபணியாளர் இடமாற்றம்... பணியின்போது காணாமல் போன டாக்டருக்கு? -அரசு மருத்துவமனை அவலத்தின் உச்சம்

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பெரியாளூர் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த கார்த்தீபன் (38) என்ற இளைஞர் திங்கள் கிழமை மாலை கீரமங்கலத்தில் நடந்த விபத்தில் ஹெல்மெட் உடைந்து குத்தியதில் பலத்த காயமடைந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அந்த நேரத்தில் பணி மருத்துவர் இல்லாத நிலையில் கார்த்தீபனுக்கு மருத்துவமனை துப்புரவுபணியாளர் கோவிந்தராஜன் தையல் போட்டார். இந்த காட்சி வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இந்தநிலையில் நக்கீரன் இணையத்திலும் செய்தி வெளியாகியிருந்தது.

 

INCIDENT IN ARANTHANGI HOSPITAL


அதன் பிறகு செவ்வாய் கிழமை புதுக்கோட்டை மாவட்ட சுகாதார இணை இயக்குநர் சந்திரசேகரன் இது பற்றிய விசாரணைக்கு உத்தரவிட்டார். புதன் கிழமை மனிதாபிமான அடிப்படையில் தையல் போட்ட துப்புரவுப் பணியாளர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் பணியின் போது காணாமல் போன மருத்துவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இது குறித்து இணை இயக்குநர் சந்திரசேகரனிடம் கேட்டபோது, விசாரணை நடத்தி கோவிந்தராஜனை மணமேல்குடிக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தையல் போடும் பணியை செய்ய வேண்டிய அந்த நேரத்திற்கான பணி மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இல்லாதபோது தான் துப்புரவுப் பணியாளர் தையல் போட்டிருக்கிறார். ஆனால் தையல் போட்டவரை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பணி நேரத்தில் அவசர சிகிச்சைக்கு தையல் போட வேண்டிய நேரத்தில் காணாமல் போன மருத்துவர் மற்றும் பணியாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற நமது கேள்விக்கு,

முதல்கட்டமாக தையல் போட்ட கோவிந்தராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அடுத்து டாக்டர்கள், செவிலிரயர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

கீழ்நிலைப் பணியாளர் என்றால் கேள்வி கேட்பாரின்றி  நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் உயர்பதவி என்றால் தயங்குவது ஏனோ?

இது குறித்து கார்த்தீபனின் சகோதரர் காந்தி நம்மிடம், காயமடைந்து கொண்டு வந்தபோது அவரை பார்க்க கூட மருத்துவர் வரவில்லை. அதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன் கோவிந்தராஜன் தையல் போட்டார். அதன் பிறகு ஊழியர்களிடம் சத்தம் போட்டு சிகிச்சை அளிக்க சொன்னோம். அப்ப கூட மருத்துவர் வரல. அடுத்த நாள்தான் மருத்துவர் வந்து பார்த்தார். ஏழைகளின் உயிர் மீது இப்படி அலட்சியம் காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மனிதாபிமானத்தோடு செயல்பட்டவர் மீது நடவடிக்கை என்பது வேதனை அளிக்கிறது. அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு பிறகு பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறோம் என்றார்.

சில நாட்களுக்கு முன்புதான் அமைச்சர் விஜயபாஸ்கர் தரச்சான்று வழங்கி மருத்துவமனையை பாராட்டிச் சென்றார். ஆனால் அடுத்த சில நாட்களில் இப்படி.  துப்புரவுப் பணியாளர் தையல் போடும் வீடியோ, செய்திகள் வெளியான நிலையில் சில நாட்களாக மருத்துவமனை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.