Skip to main content

திருமணம் செய்துவைக்க சொல்லி தகராறு... தந்தையை கொலை செய்த மகன் கைது!!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020
incident in andimadam

 

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ளது கொங்கு நாட்டார் குப்பம். இந்த ஊரை சேர்ந்தவர் 65 வயது சக்கரவர்த்தி, இவருக்கு 3 மகன்கள். இரு மகன்களுக்கு ஏற்கனவே திருமணம் செய்து வைத்துவிட்டார். இவரது மூன்றாவது மகன் கலியமூர்த்தி வயது 35. இவர் வெல்டிங் வேலை செய்யும் தொழிலாளி. அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை முழுவதும் மது குடித்தே செலவழித்து விடுவார். குடும்பத்திற்கு எதுவும் தருவதில்லை. வேலை செய்வதும் குடிப்பதுமாக இருப்பார். இதனால் இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்கவில்லை.

மேலும் பெண் கேட்டு போகும் இடங்களில் கலியமூர்த்தி குடிப்பழக்கம் உள்ளவர் என்பதை தெரிந்துகொண்டு சிலர் பெண் கொடுக்க தயக்கம் காட்டி வந்தனர். இந்தநிலையில் தனது தந்தை சக்கரவர்த்தியிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு குடித்துவிட்டு வந்து தினமும் வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதன் உச்சகட்டமாக நேற்று முன்தினம் போதையுடன் வந்த கலியமூர்த்தி தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார். கோபத்தின் உச்சிக்குச் சென்ற கலியமூர்த்தி அருகிலிருந்த மண்வெட்டி எடுத்து தந்தை சக்கரவர்த்தியை தாக்கினார். இதில் சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்தனர். திருமணம் செய்து வைக்கவில்லை என்று தந்தையை கொலை செய்த மகனின் செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.