தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெய்த மழையில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை அடுத்த மஞ்சடி பகுதியில் கடந்த மூன்று மணி நேரமாக பலத்த மழை பொழிந்து வருகிறது. ஏற்காடு மலையில் பெய்கின்ற மழையின் நீரும், பாப்பிரெட்டிப்பட்டியில் பெய்கின்ற மழை நீரும் மஞ்சடி வழியாக ஆற்றில் கலக்கின்ற நிலையில், மஞ்சடி சாலையின் குறுக்கே ஆறடி உயரத்தில் உள்ள உயர்மட்ட பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அரூர், சேலம் செல்கின்ற வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாலை கடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பேருந்துகளும் சாலை கடக்க முடியாமல் பாதியில் திரும்பி செல்கின்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக கனமழை பொழிந்து வருவதால் சாலையில் மூன்றடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.