Skip to main content

யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை; தமிழக அரசு அறிவிப்பு 

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

Incentives for UPSC Mains Exam Tamil Nadu Government Notification

 

தமிழக அரசின் 2023 - 24 ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று வரும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து உதவும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

 

இத்திட்டத்தின் தொடக்கமாக கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக கடந்த மே மாதம் 28 ஆம் தேதி அன்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும், முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Incentives for UPSC Mains Exam Tamil Nadu Government Notification
கோப்புப்படம்

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்துப் பார்த்து, நாளை முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின், நான் முதல்வன் திட்டத்தின், போட்டித் தேர்வுகள் பிரிவின் சிறப்புத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்