Inauguration of Memorial Hall Mani Mandapam CM MK Stalin participation

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைப்பதற்காக பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூரில் உள்ள வட்டார அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.01.2024) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள பணியாளர்களின் வருகைப் பதிவேடு, உள் மற்றும் பிறநோயாளிகள் சிகிச்சை விவர பதிவேடுகள், மருந்துகள் இருப்பு பதிவேடு போன்றவற்றை ஆய்வு செய்தார்.

இந்நிலையில் விழுப்புரத்தில் வழுதரெட்டியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் திரு.ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதிப் போராளிகளுக்கு ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து அரசு சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் முதல்வர் மு.க .ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.