ADVERTISEMENT

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தீஸ் சிலை திறப்பு

10:08 PM Nov 13, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி மாநகரின் தந்தை என அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக நாளை திறந்து வைக்க உள்ளார்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் தூத்துக்குடியில் கடந்த 1869 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி (15.11.1869) பிறந்தார். அறிவுத் திறமையும், அறிவுக் கூர்மையும் கொண்டவர். உழைப்பால் உயர்ந்தவர். ஈடுபடும் செயலில் இடர்களும் தடைகளும் தொடர்ந்தாலும், அச்செயல் பலருக்கு பயன்படும் எனில், அதனை செய்து முடித்து வெற்றி காணும் மன உறுதி கொண்டவர்.

தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909 இல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் மக்களின் பேராதரவுடன் ஐந்து முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக விளங்கியுள்ளார். கடற்கரை நகரமான தூத்துக்குடி நீண்ட நெடுங்காலமாகவே குடிநீர் பிரச்சனையால் சிரமப்பட்டு வந்துள்ளது. 1927 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன், நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார்.

இந்தக் குடிநீர்ப் பிரச்சனைகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் ‘தூத்துக்குடி மக்களின் தந்தை’ என போற்றப்படுகிறார். இத்தகைய மாமனிதர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸை போற்றும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் கடந்த 13.11.2021 அன்று அறிவிக்கப்பட்டு, கடந்த 14.10.2022 அன்று உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் 77.87 லட்சம் ரூபாய் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸுக்கு குவிமாடத்துடன் கூடிய உருவச் சிலையினை நாளை (14.11.2023) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தமைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT