திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் சுமார் 29 குளிர்பானம் மற்றும் தேநீர் கடைகளில் ஆய்வு செய்தனர்.
அதில் சுமார் 55 லிட்டர் குளிர்பானங்களில் தேதி குறிப்பிடாமலும் காலாவதி ஆகியும் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுமார் 8 கடைகளுக்கு பிரிவு 55-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது அம்மா மண்டபம் அருகில் உள்ள ஒரு தேநீர் கடையில் 5 கிலோ கலப்பட டீ தூள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரை விசாரணை செய்ததில் திருச்சி குஜிலி தெருவைச் சேர்ந்த முஹம்மது ரபிக் என்பவர் தேயிலை தூள் விற்பனை செய்வது தெரியவந்தது. அவரது ஏஜென்சியில் ஆய்வு செய்யும்போது சுமார் 45 கிலோ டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குத் தொடுப்பதற்காக மூன்று சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் கலப்பட தேயிலை தூள் விற்பனைக்காகப் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.