Skip to main content

முறையற்ற 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணி... மதுரையில் அதிகரிக்கும் காற்றுமாசு... சு.வெங்கடேசன் பேட்டி 

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

Improper 'Smart City' project ... Air pollution in Madurai is higher than in Chennai ... Interview with S. Venkatesh

 

முறையற்ற ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் மதுரையில் காற்று மாசு சென்னையை விட அதிகமாகியுள்ளது. ஸ்மார்ட்சிட்டி திட்டங்களுக்கான தலைமை அதிகாரிகள் நியமிக்காமலே பணிகள் நடைபெறுவது தமிழக அரசின் நிர்வாக படுதோல்வி என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

 

மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள் குறித்து ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை குழுவினர் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

 

''தமிழகத்தில் நடைபெறும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கான சிஇஓக்கள் நியமிக்கவில்லை. தலைமையே இல்லாமல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்ககூடிய ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் நிர்வாக பலவீனம் உள்ளது. இது தமிழக அரசின் மிகப்பெரிய தோல்வி. மதுரை ஸ்மார்ட்சிட்டி திட்டம் மக்கள் பணத்தை சூறையாடகூடிய வாசலாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி தொடர்பான ஆலோசனைகுழு கூட்டங்கள் கடந்த 3 ஆண்டுகளாக கூட்டப்படவில்லை. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பதில் மதுரை மக்களின் பங்கேற்பே இல்லை. இதேபோன்று தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கவில்லை. மதுரை ஸ்மார்ட்சிட்டி எந்த வரைமுறையின்றி காலக்கெடுக்குள் முடிக்காமல் நடைபெற்றுவருகிறது. முறையற்ற திட்ட பணிகளால் மதுரையில் காற்று மாசு சென்னையை விட அதிகமாக உள்ளது என அதிர்ச்சியான ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது.

 

காற்று மாசு மக்களின் சுகாதாரத்தை கெடுக்கிறது. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் உரியகாலத்திற்குள்ளான பணிகளை கூட முடிக்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளோம்.  மதுரையிலுள்ள 50 சதவித மக்கள் போக்குவரத்து நெரிசல் பற்றி கூறியுள்ள நிலையில், தற்போது பெரியார் பேருந்துநிலைய விரிவாக்க திட்டத்தில் வணிக வளாகங்களுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மாசி வீதிகளில் நடைபெறும் புனரமைப்பு பணிகளில் மோசமான திட்ட நடைமுறைகளை செயல்படுத்தியதால் மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர். கீழமாசி, வடக்கு மாசி வீதிகளில் பணிகளை தொடங்கும் முன்பு பொதுமக்களின் கருத்துகளை கேட்க வேண்டும்.

 

இதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏற்கனவே நடைபெறும் பணிகளை முடிக்காமல் அடுத்த பணிகளை தொடங்ககூடாது. ஸ்மார்ட்சிட்டி திட்ட பணியின் போது புராதான சின்னங்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தொல்லியல் விதிமுறைகளின்படி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஸ்மார்ட்சிட்டி பணியின் தரத்தை நிர்ணயம் செய்யவதற்கான அனைத்து நிறுவனமும் தனியார் நிறுவனமாகவே உள்ளது. அரசு நிறுவனம் புறக்கணிப்பட்டுள்ளது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்று கரைகளில் அமைக்ககூடிய பூங்காக்கள் அமைப்பதில் உள்ள பிரச்சனைகள் குறித்து நெடுஞ்சாலைதுறை மாநாகராட்சி இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளோம்" என்றார்.

 

மேலும் அவர் பேசுகையில், ''மதுரை மாநகராட்சியின் புதிய விரிவாக்கப்பட்ட பகுதியில் குடிநீர் பாதாளசாக்கடை இணைப்பை உறுதிபடுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைகுழு கூட்டம் நடத்தவுள்ளோம். ஸ்மார்ட்சிட்டி ஆலோசனைகுழு கூட்டம் நடத்துவது குறித்து கேட்டபோது குழு இருப்பதே தங்களுக்கு தெரியாது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ச்சியாக ஸ்மார்ட்சிட்டி ஆலோசனைகுழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது பலமுறை வலியுறுத்திய நிலையிலும் கூட்டத்தை கூட்டவில்லை. இனி மாதந்தோறும் மாநகராட்சி ஆலோசனைகுழு கூட்டத்தை கூட்ட முயற்சி எடுக்கவில்லை என்றாலும் நாங்கள் கூட்டத்தை கூட்டுவோம்.

 

மாநகராட்சி அதிகாரிகள் யாருடைய ஒப்புதலுடன் நிதிகளை பெற்றார்கள், எந்த பணிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாநகராட்சி பணிகளில் நிதிகள் சேமிக்கபடுவதாக கூறுகின்றனர். மதுரை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளில் எவ்வளவு சேமிப்பு கிடைத்துள்ளது என்ற கேள்விக்கு சேமிப்பு வராது என மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்துள்ளார். பாதாளசாக்கடை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மார்ச் 2020க்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி கூறியுள்ளனர்.  ஆயிரம் கோடி ஸ்மார்ட்சிட்டி திட்ட நிதிகளிலிருந்து சேமிக்கும் நிதியிலிருந்து மாநகராட்சி பள்ளிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.