Skip to main content

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்! 

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Important announcements made by Chief Minister MK Stalin in the Legislative Assembly!

 

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு இன்று (10/05/2022) பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "காவல்துறையினருக்கு வார விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது; காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத மோதலை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை; மத துவேஷங்களுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை. சாலை விபத்துகளைக் குறைக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 

ரூபாய் 6.47 கோடியில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கப்படும். கடவுச்சீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வர வேண்டிய நிலை மாற்றப்படும். தமிழகத்தில் விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். காவல்துறையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு நிச்சயம் கடைப்பிடிக்கப்படும். பொள்ளாச்சியில் 266 புதிய காவலர் குடியிருப்புகள் கட்டப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

 

மாணவர்கள், இளைஞர்களைக் காப்பாற்ற கஞ்சா வேட்டை தொடர்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் வளர்ந்த போதை கலாச்சாரத்துக்கு தி.மு.க. ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் விட்டு சென்ற போதைப்பொருளை ஒழிக்கவே 'ஆப்ரேஷன் கஞ்சா திட்டம்' ஏற்படுத்தப்பட்டது. சமூக வலைத்தளங்களில் அநாகரீக எல்லையைத் தாண்டி விமர்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமூக நீதி, சட்ட நீதி என அனைவருக்குமான ஆட்சிதான் 'திராவிட மாடல்'. 

 

சரித்திர பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க பருந்து என்ற செயலி உருவாக்கப்படும். கழிவுச் செய்யப்பட்ட காவல்நிலைய காவலர்களுக்கான 200 ஜீப்புகளுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவைப் போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவாக மறுசீரமைக்கப்படும். போதைப்பொருள் தடுப்பில் ஈடுபடும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படும். 

 

அசோக் நகர் காவலர் பயிற்சிக் கல்லூரி வண்டலூர் உயர் காவல் பயிற்சியக வளாகத்திற்கு மாற்றப்படும். திட்டமிட்டக் குற்ற நுண்ணறிவுப் பிரிவு ஆளிநர்களுக்கு 5% சிறப்பு ஊதியமாக அளிக்கப்படும். காவலர் நல மேம்பாட்டிற்காக மகிழ்ச்சி என்ற செயல்திட்டம் ரூபாய் 53 லட்சத்தில் செயல்படுத்தப்படும். பெண் காவலர்களுக்கான பணி, வாழ்க்கை சமநிலை பயிற்சிக்கு ஆனந்தம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். தீயணைப்பு, சிறைத்துறைப் பணியாளர்களுக்கு காவல் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கும் வசதி. 

 

சேலம், நெல்லை, திருப்பூர், திருச்சியில் காவல் துணை ஆணையர் பதவிகள் உருவாக்கப்படும். இரு வாரங்களுக்கு ஒருமுறை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம். இளம் மற்றும் முதல் முறை குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பறவை என்னும் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை பெருநகர காவலில் மேலும் மூன்று வழித்தடங்களில் போக்குவரத்து ஒழுங்குமுறைக் கண்காணிப்பு மண்டலம் அமைக்கப்படும்". இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.