
கஜா புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என்று நாகை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் .
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேரழிவை உண்டாக்கிய கஜா புயலால் வீடுகள், விவசாயம், மரங்கள், கால்நடைகள் மட்டுமின்றி சிறு குறுத் தொழில் நிறுவனங்களும் குளைந்தன. பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு 35 சதவிகித இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தது. ஆனாலும், அந்த அறிவிப்பு புயலை போலவே அதிரடியாக அறிவித்துவிட்டு, கானல் நீரைப்போல கண்டுக்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டது.
அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தியும், சிட்கோ தொழிற்பேட்டையில் இடஒதுக்கீடு வழங்கக்கோரியும், 10 ஆண்டுகளுக்கு முன்பு பணம் செலுத்தியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும், தானே புயல் பாதிப்பின்போது கடலூர் மாவட்டத்திற்கு வழங்கியது போல நாகை மாவட்டத்திற்கும் வழங்கவேண்டுமென நாகை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் சங்கத்தினர் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சிறு, குறு தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர், அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் நாகை எம்.பி செல்வராஜ், நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.