Skip to main content

நான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க? வரிச்சூர் செல்வம் அதிரடி

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

 

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை விஐபி வரிசையில் சென்று முக்கியஸ்தவர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அத்திவரதரை விஐபி வரிசையில் சென்று பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வம் தனது நண்பர்களுடன் தரிசனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

முக்கிய நபர்கள் அத்திவரதரை தரிசிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த வரிசையில் சென்று தரிசனம் செய்தார். அத்திவரதருக்கு அருகாமையில் அமரவைக்கப்பட்டார். வரிச்சூர் செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.


 

 

இதுதொடர்பாக வரிச்சூர் செல்வம் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்துள்ளார். 
 

அதில், நான் ஏன் விஐபியாக இருக்கக்கூடாது. எனக்கு இன்கம் டாக்ஸ் ரெண்டு கோடி ரூபாய் அபராதம் போட்டாங்க. இதுவரைக்கும் எனக்கு ஏன் போட்டார்கள் என்று தெரியவில்லை. நான் ஒரு விஐபி இல்லன்னா என் மேல ரெண்டு கோடி ரூபாய் போட்டிருப்பார்களா? 
 

காஞ்சிபுரத்திற்கு அத்திவரதர் என்னை வரவழைத்தார். கடவுள் என்னை கூப்பிடுகிறார். நான் விஐபி பாஸில் போகிறேன். அங்கு உள்ளவர்கள் என்னை அங்கு உட்கார வைக்கிறார்கள். இது ஒரு தப்பா? அடுத்த 40 வருஷத்துக்கு அப்புறம்தான் பாக்க முடியும். அடுத்த 40 வருஷத்துல கண்டிப்பாக நான் இருக்கப்போறதுல்ல. அதனால பார்க்கப்போனேன். 

 

Varichiyur Selvam



நான் ரவுடியே கிடையாது. 1985ல் எங்க அப்பாவை ஒருவர் தாக்கினார். பதிலுக்கு நான் தாக்கினேன். இவர்களாகவே ரவுடி என்று சித்தரித்துவிட்டனர். ரவுடின்னா என்ன. பொதுமக்களை ஏமாற்றுவது, பறிப்பது, கடையில சாப்பிட்டு காசுக்கொடுக்காம போறது, இதெல்லாம்தான் ரவுடி. நான் அந்த மாதிரி கிடையாதே. மூனு, நாலு கோடி ரூபாய்க்கு நான் கார் வைச்சிருக்கேன். நான் ஏன் ரவுயா இருக்கணும். 
 

பொதுமக்கள் என்னுக்கிட்ட வருவாங்க, என் இடத்தை காலி பண்ணமாட்டேங்குறாங்க என்று சொல்லுவாங்க. நான் போய் பேசுவேன். இதைத்தான் நான் செஞ்சிருக்கேன். இதுவரைக்கும் நான் பொதுமக்களை ஏமாத்துனது கிடையாது. பொதுமக்களுக்கிட்ட நான் சண்டை போட்டது கிடையாது. பொதுமக்களுக்கு நான் என்னைக்கும் துரோகம் பண்ணுனது கிடையாது. அப்புறம் எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க. அந்த காலத்துல ஊர்ல பஞ்சாயத்தாருன்னு சொல்லுவாங்க. அவுங்கள ரவுடின்னு சொல்ல முடியுமா? அதைப்போலத்தான் பஞ்சாயத்தாரு. நான் பொதுமக்களுக்கிட்ட நல்ல பெயர்லத்தான் இருக்கேன்.


 

 

என்னுடைய ரோல் மாடல் விஜய் மல்லையாதான். அவர்தான் என்னுடைய குரு. அவர்தான் வாழ்க்கையை வாழ்கிறார். பிறக்கும்போது ஏழையா பொறப்பது நாம் செய்த தப்பு கிடையாது. ஆனால்  சாகும்போது ஏழையா சாகக்கூடாது. 
 

எனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது. யார் இவரு வரிச்சூர் செல்வம் அப்படியின்னு, நான் வித்தியாசமாக நகைகளை போட்டுள்ளதால் பிரபலமாகிறேன். கலைஞர் அய்யா அப்படின்னா கண்ணாடி. எம்.ஜி.ஆர். என்றால் தொப்பி. வரிச்சூர் செல்வம் அப்படியின்னா இந்த நகை. வரிச்சூர் என்பது எங்க ஊர். வரிச்சூர் என்றால் கூகுளில் காட்டாது. இப்ப வரிச்சூர் எங்க இருக்குன்னு தேடுறாங்கல்ல. எங்க ஊருக்கு நான் பெருமை சேர்க்கிறேன். இவ்வாறு கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொலையை வீடியோ காலில் பார்த்து ரசித்த வரிச்சியூர் செல்வம்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

How varichiyur selvam has been arrested by police

 

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதைப் போல, நகைகளைக் குவியலாக அணிந்துகொண்டு ஜோக்கர் கெட்டப்பில் வலம் வந்தாலும், தனது ரவுடித் தனத்தை வரிச்சியூர் செல்வம் தொடரவே செய்திருக்கிறார். 2020-ல் மதுரை வரிச்சியூர் அருகே குன்னத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணராஜனும், ஊராட்சி மன்றப் பணியாளர் முனிச்சாமியும் படுகொலை செய்யப்பட்டனர்.

 

இந்த வழக்கில் வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியான விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் 4-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவரை சென்னைக்கு தப்பிச் சென்றுவிடுமாறு வரிச்சியூர் செல்வம் கூறிய நிலையில் மாயமானார். குற்றவாளி செந்தில்குமாரை கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில்குமார் மனைவி முருகலட்சுமியும், தனது கணவர் காணாமல்போனதாக விருதுநகர் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையிலும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தவேண்டும் என மனு அளித்தார். 

 

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், அருப்புக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருண் காரத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் தேடுதலும் தீவிரப்படுத்தப்பட்டது.

 

வரிச்சியூர் செல்வம் கைதான பின்னணி இது:

 

காணாமல்போன செந்தில்குமாரின் செல் போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, வரிச்சியூர் செல்வத்திடமும், திருவான்மியூர் சாம் குமாரிடமும் பேசியது தெரியவந்துள்ளது. வரிச்சியூர் செல்வத்தின் தூண்டுதலினால் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டதை சாம்குமார் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

 

How varichiyur selvam has been arrested by police
செந்தில்குமார்

 

வரிச்சியூர் செல்வத்துடன் பிரச்சனையானதால், அவரிடமிருந்து பிரிந்து விருதுநகரில் குடியேறிய செந்தில்குமார், சமாதானம் பேச அழைக்கப்பட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சென்னையில் ஆள் கடத்தல் அசைன்மெண்ட் ஒன்றை செந்தில்குமாரிடம் தந்த வரிச்சியூர் செல்வம், கூடவே இரண்டு நபர்களை அனுப்பி வைத்துள்ளார்.

 

வரிச்சியூர் செல்வத்தின் உள்நோக்கத்தை அறியாத செந்தில்குமாரை, உடன் சென்ற இருவரும் மாமல்லபுரம் திருவடந்தை காட்டேஜ் ஒன்றில் தங்கவைத்துள்ளனர். பிறகுதான் அந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர். இரண்டுபேர் செந்தில்குமாரைத் திமிரவிடாமல் பிடித்துக்கொள்ள, ஒருவர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். நடந்ததை எல்லாம் வாட்ஸ்-அப் காலில் வரிச்சியூர் செல்வத்துக்கு காட்டியுள்ளனர். அதன்பிறகு, செந்தில்குமாரின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து செந்தில் குமாரின் உடலை கம்பளியால் சுற்றி தூத்துக்குடி மாவட்டம் முரப்பநாட்டுக்கு எடுத்துவந்து தாமிரபரணி ஆற்றில் வீசியிருக்கின்றனர்.

 

How varichiyur selvam has been arrested by police

 

காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் செந்தில்குமார் கொல்லப்பட்டதை ஒத்துக்கொண்ட வரிச்சியூர் செல்வம், கொலைக்கான காரணத்தை இவ்வாறுதான் பதிவு செய்யவேண்டும் என்று கெஞ்சியிருக்கிறார். “என்னை மீறி செந்தில்குமார் வளர்ந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். எனக்கு துரோகமும் செய்தான். அதனால்தான், அவன் கொலை செய்யப்பட்டான்” என்று கூறியிருக்கிறார்.

 

செந்தில்குமார் கொலையை வரிச்சியூர் செல்வம் வாட்ஸ்-அப் காலில் பார்த்து ரசித்ததன் பின்னணியில் வலுவான சொந்த விவகாரம் ஒன்று இருக்கிறது. வரிச்சியூர் செல்வத்தின் உறவுகளில் ஒன்றை தொந்தரவு செய்ததாலேயே செந்தில்குமாரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் இந்த உண்மையைப் பதிவு செய்துவிடவேண்டாம் என்பதே வரிச்சியூர் செல்வத்தின் கோரிக்கையாக இருந்திருக்கிறது.

 

ஆள் கடத்தல், கொலை செய்தல், சட்ட விரோதமாக உடலை மறைத்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வரிச்சியூர் செல்வம், 15 நாள் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

 

Next Story

வரிச்சியூர் செல்வம் மீது 9 பிரிவுகளில் வழக்கு

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

nn

 

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மதுரை மாவட்டம் வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கூட்டாளியான செந்தில் என்பவர் காணாமல் போனதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் செந்தில்  கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

 

மன வேறுபாடு காரணமாக கூட்டாளியாக இருந்த வரிச்சியூர் செல்வமும் செந்திலும் தனியாகப் பிரிந்தனர். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செல்வம் அழைப்பதாக செந்தில் தன் மனைவியிடம் கூறிவிட்டுச் சென்ற நிலையில், அவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது விருதுநகரில் வைத்து ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்துள்ளனர். சாத்தூர் நீதிமன்றத்தில் செல்வத்தை போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட வரிச்சியூர் செல்வம் மீது ஆள் கடத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.